மோட்டோஜிபி-இல் கலந்துக் கொள்ளும் ஒரே இந்திய ரைடர்!! நாட்டில் ரைடருக்கா பஞ்சம்? இனி இந்த நிலை மாறுமா?
மோட்டோஜிபி பாரத் பந்தயங்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த பைக் ரைடராக ஒரேயொருவர் மட்டுமே பங்கேற்று உள்ளார். யார் அவர்? எங்கு உள்ளார்? அவரது எதிர்கால நோக்கம் என்ன? என்பவற்றை அறிய வாருங்கள் செய்திக்குள் போவோம்.
இந்தியா முழுவதும் மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார்சைக்கிள் பந்தயத்தை பற்றிய பேச்சாகவே உள்ளது. ஏனெனில், சுமார் 74 வருட வரலாறுடன் உலகம் முழுவதும் பிரபலமாக விளங்கும் இந்த மோட்டார்சைக்கிள் பந்தயம் இந்தியாவில் இப்போதுதான் முதல்முறையாக நடைபெறுகிறது.

டெல்லிக்கு அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் சர்வதேச பந்தய களத்தில் இந்த பந்தயங்கள் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி துவங்கின. செப்டம்பர் 24ஆம் தேதி வரையில் இந்த பந்தயங்கள் நடைபெறவுள்ளன. இந்த 3 நாட்களில் பயிற்சி பந்தயங்களில் இருந்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இறுதி பந்தயம் வரை என பல்வேறு பந்தயங்கள் நடைபெறவுள்ளன.
இந்த பந்தயங்களில் உலக புகழ்பெற்ற பைக் ரைடர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர் என்பதால், போட்டியை காண லட்சக்கணக்கிலான பார்வையாளர்கள் வருவர் என கணிக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற ரைடர்கள் உடன் நம் இந்தியாவை சேர்ந்த ஒரு இளம் பைக் ரைடரும் மோட்டோஜிபி பாரத் பந்தயங்களில் கலந்துக் கொள்ளவுள்ளார். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் இருந்து கலந்துக் கொள்ளும் ஒரே ரைடர் இவர் தானாம்.

இவரது பெயர், கடாய் யாசீன் அகமது (Kadai Yaseen Ahamed). 1997இல் சென்னையில் பிறந்தவரான இவர் மோட்டோஜிபி-இல் முதல்முறையாக கலந்துக் கொள்கிறார். பெரும்பாலான இளைஞர்களை போலவே, யாசீன் அகமதுக்கும் சிறு வயது முதலே பைக் ரேசிங்கில் ஆர்வம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. பொது சாலையில் பைக் ரேசிங்கில் ஈடுப்படுவது குற்றம் என்பது தெரியாமல், 15 வயதின் போது சட்டத்திற்கு புறம்பாக ரோடு ரேசிங்கில் இவர் ஈடுப்பட்டுள்ளார்.
அப்போது தொழில்முறை பந்தய வீரர் ஒருவர், யாசீன் அகமதுவின் திறமையை கண்டு, இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுப்பட வேண்டாம் என அறிவுறுத்தி, தொழில்முறை பைக் ரைடராக பயிற்சி எடு என வழிக்காட்டி உள்ளார். அதன் பின்னரே, யாசீன் அகமது நன்கு பயிற்சி பெற்று, சென்னை ரேசிங் டிராக்கில் பல்வேறு பந்தயங்களில் கலந்துக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் பைக் ரேசர் ஆக வேண்டும் என்றால் பெரும்பாலான பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். யாசீன் அகமதுவுக்கும் இந்த பிரச்சனை ஆரம்ப காலக்கட்டத்தில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அவரது அம்மா, பைக் ரேசிங்கில் உள்ள பாதுகாப்பு குறித்து மிகவும் கவலையுற்றுள்ளார். பின்னர், யாசீன் அகமதுவின் பயிற்சியாளர் அவரது குடும்பத்தை சமாளித்து, யாசீன் அகமதுவை பயிற்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.
உலகளவில் முக்கியமானதாக பார்க்கப்பட்டாலும், இந்தியாவை பொறுத்தவரையில் மோட்டோ ஜிபி கூட நம் மக்களால் முக்கியமானதாக கவனிக்கப்படாது என்பது யாசீன் அகமதுவின் கருத்து. இருப்பினும், இதன் மூலமாக இந்தியாவில் மேலும் சில ரைடர்கள் உருவாகலாம் என்ற நம்பிக்கையில் இவர் உள்ளார். "எனது தற்போதைய கவனம் மோட்டோஜிபி 3 மீதுதான் உள்ளது. எதிர்காலத்தில் முக்கியமான பந்தயங்களில் கலந்துக் கொள்ள ஆவலாக உள்ளேன்" என்கிறார் கடாய் யாசீன் அகமது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சட்டத்திற்கு புறம்பான போட்டியில் இருந்து இன்று உலக புகழ்பெற்ற மோட்டோஜிபி வரையில் கடாய் யாசீன் அகமது வளர்ச்சி கண்டுள்ளார். இந்தியாவில் புது புது ரைடர்கள் உருவாகுவதற்கு எந்த அளவிற்கு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதற்கு இவரே சாட்சி எனலாம். யாசீன் அகமதுவின் ஆசையை போல், இவரது ரேசிங்கை பார்த்து மேலும் சில ரைடர்கள் நம் நாட்டில் உருவாகட்டும்...


Click it and Unblock the Notifications









