மோட்டோஜிபி பாரத்... இந்தியாவின் மானம் சம்பந்தப்பட்டது!! உ.பி போலீஸார் அனைத்திற்கும் தயார்!
இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் மோட்டோஜிபி பந்தயத்திற்கு மிகவும் உயர் தரத்திலான பாதுகாப்பை வழங்க உத்திர பிரதேச மாநில போலீஸார் திட்டமிட்டு உள்ளனர். உ.பி உள்பட வட மாநிலங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை இனி பார்க்கலாம்.
பல்வேறு நாடுகளில் ஒன்றன்பின் ஒன்றாக 2023ஆம் ஆண்டிற்கான மோட்டோஜிபி பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்சமயம் கஜகஸ்தானில் நடைபெற வேண்டிய போட்டி ரத்தாகியதால், ஆகஸ்ட் 6ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கும் போட்டிகளுக்காக மோட்டோஜிபி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இங்கிலாந்திற்கு அடுத்து சில ஐரோப்பிய நாடுகளில் மோட்டோஜிபி பந்தயங்கள் நடத்தப்பட உள்ளன.

அதனை தொடர்ந்து, வருகிற செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்து அடுத்த 3 நாட்களுக்கு மோட்டோஜிபி பந்தயங்கள் இந்தியாவில் நடத்தப்பட உள்ளன. இந்தியாவில் முதல்முறையாக மோட்டோஜிபி பந்தயம் உத்திர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள புத் சர்வதேச பந்தய களத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட்கள் முன்பதிவு கடந்த வாரத்தில் துவங்கப்பட்ட நிலையில், அடுத்த சில நாட்களிலேயே டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்தன.
இந்த நிலையில், மோட்டோஜிபி பந்தய குழுவினருக்கும், பார்வையாளர்களுக்கும் எந்த அளவிற்கான பாதுகாப்பை வழங்குவது என்பது குறித்த முக்கிய முத்தரப்பு கலந்துரையாடல் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் சர்வதேச புத் பந்தய களம் அமைந்துள்ள கௌதம் புத்தா நகர் போலீஸார், மோட்டோஜிபி பாரத் குழு அதிகாரிகள் மற்றும் ஸ்பான்சர்கள் & புரோமோட்டர்கள் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின்போது நிகழ்ச்சியை பாதுகாப்பாகவும், எந்தவொரு பிரச்சனையுமின்றி இன்றி நடத்துவது குறித்து பல்வேறு கண்ணோட்டங்களில் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய ஃபேர்ஸ்ட்ரீட் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி புஷ்கர் நத் ஸ்ரீவஸ்தாவா, "இது ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு. இந்தியாவிற்கான மோட்டோஜிபி பாரத்தின் முக்கியத்துவத்தை லோக்கல் போலீஸார் புரிந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் எல்லா வழிகளிலும் தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இந்த சந்திப்பின் மூலம் நிகழ்ச்சியை இடையூறின்றி நிர்வகித்தல் மற்றும் அதற்கான வேலைகளில் ஈடுப்படுவதற்கான நோக்கம் இன்னும் தெளிவுப்படுத்தப் பட்டுள்ளது" என்றார். இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் பந்தயத்தை எந்தவொரு பிரச்சனையும், அசவுகரியமும் இன்றி பாதுகாப்பாக நடத்துவதாகும்.

அதேநேரம், மோட்டோஜிபி பந்தயம் நடைபெறுவதால் பந்தய களத்தை சுற்றி ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை சமாளிக்கவும் இந்த சந்திப்பின்போது திட்டமிடப்பட்டுள்ளது. மோட்டோஜிபி பாரத் பந்தயங்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பார்வையிட உள்ளனர். நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிற சூழல் நிலவுகிறது.
பிரதமர் மோடி வருகை தருவதாக இருந்தால், தனி ஹெலிகாப்டரில் வருவார். மற்ற முக்கிய பிரமுகர்களும் ஹெலிகாப்டர்களில் வருவார்கள் என்பதால் ஹெலிபேட் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது, அவர்களை அதன்பின் பாதுகாப்பாக பந்தய களத்திற்குள் அழைத்து செல்வது என பல்வேறு பொறுப்புகள் போலீஸாரின் தலையில் உள்ளது. இதற்காக, சமீபத்திய சந்திப்பின்போது பந்தய களத்தையும் நேரில் பார்வையிட்ட கௌதம் புத்தா நகர போலீஸார் இதுகுறித்த திட்டங்களை கிரேட்டர் நொய்டா மாநகர டிஜிபி முன்பு சமர்பித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்திருந்தாலும், தேசிய தலைநகர் டெல்லியில் இருந்து வெறும் 40கிமீ தொலைவில் அமைந்துள்ள புத் சர்வதேச பந்தய களத்தில் சுமார் 1.10 லட்சம் பேர் வரையில் அமரலாம். இதுதவிர, பந்தயத்தை நடத்துபவர்கள், ரேஸர்கள் மற்றும் அவர்களது உதவி குழுவினர் என்று கணக்கிட்டு பார்த்தால் எண்ணிக்கை எங்கேயோ வந்துவிடும். ஆதலால்தான், 2 மாதங்களுக்கு முன்பாகவே இதற்கான திட்டங்களில் கிரேட்டர் நொய்டா போலீஸார் இறங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications









