லட்ச ரூபாயில் டிக்கெட் வாங்கினாலும் சரி... தப்பு தவறி கூட இதையெல்லாம் கொண்டு போயிடாதீங்க - மரியாதை போயிடும்!!
பாரத் மோட்டோஜிபி பந்தயம் விரைவில் இந்தியாவில் துவங்கப்பட உள்ள நிலையில், மோட்டோஜிபி பந்தயத்தை காண வருகை தரும் பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட உள்ள கட்டுப்பாடுகள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. இதன்படி பார்க்கும்போது, இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் மோட்டோஜிபி போட்டியை பார்வையாளர்கள் பலத்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தான் கண்டு ரசிக்க முடியும்.
உலகம் முழுவதும் பிரபலமான, நம்பர் ஒன் மோட்டார்சைக்கிள் பந்தயம் மோட்டோஜிபி ஆகும். மோட்டோஜிபி பந்தயங்கள் பொதுவாக பல மாதங்களுக்கு, உலகின் முக்கியமான நகரங்களில் நடத்தப்படுவது வழக்கம். இந்த வகையில், இந்த 2023ஆம் ஆண்டிற்கான போட்டிகளும் பல்வேறு நாடுகளில் திட்டமிட்டப்படி நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில், அடுத்ததாக மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் போட்டி இந்தியாவில் கிரேட்டர் நொய்டாவுக்கு அருகே நடத்தப்பட உள்ளது. மோட்டோஜிபி வரலாற்றிலேயே இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் பந்தயம் நடக்கவுள்ளது இதுவே முதல்முறை ஆகும். இதனாலேயே, பாரத் மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான ஆவல் நாடு முழுவதும் உருவாகியுள்ளது.
வருகிற செப்.22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் 3 நாட்களுக்கு உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவிற்கு அருகே உள்ள புத் சர்வதேச பந்தய களத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் உலகின் தற்கால முன்னணி பைக் ரேசர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களின் சீறி பாயும் போட்டியை காண இந்தியாவில் பைக் ஆர்வலர்களை தாண்டி, பொது மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில், மோட்டோஜிபி பாரத் பந்தயத்தை காண வரும் பார்வையாளர்கள் பவர் பேங்குகள், மடிக்கணினிகள், தொலைநோக்கி, தொழில்முறை கேமரா உள்ளிட்டவற்றை கொண்டுவர இந்த பந்தயத்தை இந்தியாவில் நடந்தும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும், எந்தெந்த பொருட்களை கொண்டுவரக் கூடாது என்பது குறித்த விபரங்களை இணையத்திலும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி பார்க்கும்போது, பை, ரேடியோ, நாற்காலி, மேசை, பெரிய ஹேண்ட் பேக்ஸ், குடை, பலூன், நாணயங்கள், பாட்டில்கள், வெடிப் பொருட்கள், லைட்டர்/ தீப்பெட்டி, கண்ணாடியிலான பொருட்கள், வாசனை பொருட்கள், ட்ரோன், ஆல்கஹால், கேன்கள், போதை தரும் சுவிங்கம் உள்பட சாதாரண சுவிங்கம் கூட பந்தயம் நடைபெறும் களத்திற்குள் கொண்டு செல்ல தடைக்க விதிக்கப்பட்டு உள்ளது.

இத்துடன் இந்த லிஸ்ட் நிற்கவில்லை, வளர்ப்பு பிராணிகள், லேசர் விளக்குகள், பேனா/ பென்சில், ஸ்கேட்போர்டுகள், பிளேட்கள் போன்றவற்றையும் போட்டி நிர்வாகிகள் கண்டால் பறிமுதல் செய்துவிடுவார்கள். குறிப்பாக, வெடி பொருட்கள், ஆயுதங்கள், கூர்மையான முனைகளை கொண்ட பொருட்கள், ஊசிகள் மற்றும் ஸ்பிரே உள்ளிட்டவற்றுக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், பார்வையாளர்கள் எதையதை எல்லாம் தங்களுடன் கொண்டுவரலாம் என்பதையும் போட்டி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அவையாவன, தொப்பி, இயர் பிளக்ஸ், சன்ஸ்க்ரீன், பாய்/ பிக்னிக் துணி, சன் கிளாஸஸ், குழந்தைகளுக்கான உணவு மற்றும் மாத்திரை, மருந்துகள் ஆகியவை ஆகும். பார்வையாளர்கள் வீட்டில் இருந்து உணவை ரேஸ் டிராக்கிற்கு கொண்டு செல்ல முடியாது. பந்தய களத்தின் வளாகத்திற்குள் விற்கப்படும் உணவுகளை வேண்டுமாயின் எடுத்து செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் முக்கியமான பைக் பந்தயமான இதில், ஏற்கனவே கூறியதுபோல், உலகின் முக்கிய ரேசர்கள் கலந்துக் கொள்வர். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இந்திய அரசு மற்றும் பந்தயத்தை நடத்துபவர்களின் கடமை ஆகும். ஆகையால், முன்னெச்சரிக்கையாக சில பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஒருபக்கம் இந்த தடை உத்தரவுகள் சில பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications









