புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி குற்றங்களுக்கான புதிய அபராதப் பட்டியல்!
மக்களவையில் நிறைவேறியுள்ள புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தில் உள்ள அடிப்படை சாராம்சங்கள் என்ன என்பது குறித்த தகவல்களை காணலாம்.
புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் மக்களவையில் நிறைவேறியுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின்படி உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவோருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்திருத்தத்தில் உள்ள சாராம்சங்கள் பற்றி முழுமையாக இத்தொகுப்பில் காணலாம்.

கடந்த, 1989ம் ஆண்டு இந்திய மோட்டார் வாகன சட்டம் மேம்படுத்தப்பட்டது. அதன் பிறகு, 28 ஆண்டுகளாக அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் சாலைகளிலும், வாகன எண்ணிக்கையிலும் ஏராளமான மாற்றங்கள் வந்து விட்டன. இதற்கு ஏற்றவாறு சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டது.

மோட்டார் வாகன திருத்தங்கள் மசோதா 2016, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் நாடாளுடன்றத்தில் நிலைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அந்த நிலைக்குழு, மசோதாவில் பல மாற்றங்களை பரிந்துரைத்தது. அந்த மாற்றங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் பேரில் தற்போது வாகன திருத்த சட்டம் மக்களவையில் நிறைவேறியுள்ளது.

மசோதா நிறைவேறிய பிறகு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து துறைஅமைச்சர் நிதின் கட்கரி "போக்குவரத்து துறையில் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் நடைபெறும். 100 சதவீத மின்னணு நிர்வாகத்தை இந்த மசோதா உறுதி செய்யும். மேலும், மின்னணு நிர்வாகம் செயல்பாட்டுக்கு வந்தால், போலி ஓட்டுனர் உரிமங்களை தயாரிக்க முடியாது. மேலும், வாகன திருட்டும் நடைபெறாது" என்று தெரிவித்தார்.

போக்குவரத்துத் துறையில் சீர்த்திருத்தம் மேற்கொள்ள கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டதிருத்த மசோதாவில், சாலை விதி மீறல் உள்ளிட்ட குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 10 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களையும் குறைக்கலாம் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சாலைவிபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம், 10 மடங்கு இழப்பீடு கிடைக்கவும், வாகனங்கள் ஓட்டி பிடிபடும் அல்லது விபத்துக்களை ஏற்படுத்தும் மைனர் சிறுவர்களின் பெற்றோருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் வகையில் இதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவின்படி எந்த வகையான குற்றங்களுக்கு எவ்வளவு தொகை அபராதம் விதிக்கப்படும் என்ற விவரத்தை கீழ்கண்ட பட்டியலில் காணுங்கள்.
- சாலை விதிகளை மீறுதல் - ரூ.500 அபராதம்
- உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் - ரூ.5,000
- அதிவேகமாக கார் ஓட்டுதல் - ரூ.2,000
- மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் - ரூ.10,000
- ஹெல்மட் அணியாமல் பைக் ஓட்டுதல் - ரூ.1,000

இதேபோல, சாலை விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் சார்பில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் தரப்படும். மேலும் கூடுதல் இழப்பீட்டு தொகையை உயிரிழப்பு ஏற்பட காரணமான வாகன உரிமையாளரிடம் பெறும் வகையில் ஓட்டுனர் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத வாகனங்கள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இழப்பீடு அளிக்கும் வகையில் புதிய நிதியம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டேக்ஸி சேவைக்கான உரிமத்தை இதுவரையிலும் அந்தந்த மாநிலங்களின் வரைமுறைகள்படி வழங்கப்பட்டு வருகின்றன. இனி, மத்திய அரசு வகுத்துள்ள நெறிமுறைகளின்படியே மாநில அரசாங்கங்கள் டேக்ஸி உரிமம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து வழக்குகளில் நீதிமன்றங்கள் அறிவிக்கும் இழப்பீட்டு தொகை, மூன்றாம் நபர் காப்பீட்டு தொகையின் அதிகபட்ச அளவைக் காட்டிலும் அதிகமாக இருந்தால் மிச்சத் தொகையை யாரிடம் வசூலிப்பது என்பது குறித்து இந்த மசோதாவில் தெளிவான தகவல் இல்லை என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








