அடக்கடவுளே... வேண்டுமென்றே பைக்கின் மீது மோதிய கேரள இளைஞர்கள்... காரணம் தெரிந்தால் கடுப்பாயிருவீங்க
இளைஞர்கள் சிலர் தங்களது பைக்கை வேண்டுமென்றே மற்றொரு பைக்கின் மீது மோதிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இணையம் தற்போது நமது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு அங்கமாக மாறியுள்ளது. பல்வேறு விஷயங்கள் தொடர்பான தகவல்களை பெறுவதற்கும், நமது கருத்துக்களை தெரிவிப்பதற்கும், பொழுதுபோக்கிற்காகவும் என பல்வேறு காரணங்களுக்காக நாம் தினமும் இணையத்தை பயன்படுத்தி வருகிறோம்.

ஒரு சிலர் வித்தியாசமான வீடியோக்கள் மூலம் இணையத்தில் வெகு வேகமாக பிரபலமாகி விடுகின்றனர். வைரல் வீடியோக்களை உருவாக்கும் யார் வேண்டுமானாலும் இணையத்தில் ஒரே நாளில் பிரபலமாகலாம். இந்த வகையில் இணையத்தில் வைரல் வீடியோக்கள் பலவற்றை நாம் பார்த்துள்ளோம். பைக் ரைடர்கள் பலர் கூட வைரல் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

காவல் துறையினரையோ அல்லது விபத்துக்களையோ எதிர்கொண்டபோது எடுக்கப்பட்ட அவர்களது வீடியோக்கள் கடந்த காலங்களில் பல முறை வைரல் ஆகியுள்ளன. ஆனால் ஒரு சிலர், வீடியோக்கள் வைரல் ஆக வேண்டும் என்பதற்காக விபரீதமான முயற்சிகளை கையில் எடுத்து பெரும் சிக்கலில் சிக்கி கொள்கின்றனர்.

இந்த வகையில் கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வைரல் வீடியோவை உருவாக்க வேண்டும் என்பதற்காக அபாயகரமான முயற்சியை மேற்கொண்டனர். அவர்கள் எதிர்பார்த்தபடி வீடியோ வைரல் ஆகி விட்டதுதான். ஆனால் கூடவே அவர்கள் அனைவரும் சிக்கலிலும் சிக்கி கொண்டுள்ளனர். அவர்கள் செய்த காரியம் உண்மையிலேயே அதிர்ச்சிகரமான ரகம்தான்.

வீடியோ வைரல் ஆக வேண்டும் என்பதற்காக தங்களது பைக்கை வேண்டுமென்றே மற்றொரு பைக்கின் மீது அவர்கள் மோதியுள்ளனர். இதுகுறித்து மனோரமா நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்போது சிக்கலில் சிக்கி கொண்டுள்ள இளைஞர்கள், ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் மீது மோதும் ஒரு வீடியோவை கடந்த சில நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்தனர்.

சமூக வலை தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவியது. முதலில் வெளியான வீடியோவில், இந்த சம்பவம் உண்மையான விபத்து போலதான் தெரிந்தது. தனது பைக்கை கட்டுப்படுத்த முடியாத ஒருவர், தனக்கு முன்னால் மெதுவாக சென்று கொண்டிருந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் மீது மோதும் காட்சிகள் இந்த வீடியோவில் இருந்தன.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ஓட்டிய நபருக்கும், அந்த பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நபருக்கும் முதலில் என்ன நடக்கிறது? என்பதே தெரியவில்லை. அதிர்ச்சியடைந்தவர்களை போல் அவர்கள் காணப்பட்டனர். இந்த சம்பவங்கள் கேமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நாம் ஏற்கனவே கூறியபடி இது விபத்து கிடையாது. திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வு.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வேண்டுமென்றே ஒரு பைக் மீது மோத வேண்டும் என்றும், இதன் மூலம் வைரல் வீடியோவை உருவாக்க முடியும் எனவும் ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். திரைக்கு பின்னால் என்ன நடந்தது? (Behind The Scene) என்பதை காட்டும் வீடியோவை அவர்கள் வெளியிடும் வரை அனைத்தும் திட்டமிட்டபடிதான் சென்று கொண்டிருந்தது.

இந்த சம்பவத்தை அவர்கள் திட்டமிட்டு செய்தது, இந்த வீடியோவின் மூலம் தெளிவாக தெரியவந்தது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தங்களது பல்சர் ஆர்எஸ்200 பைக்கை வேண்டுமென்றே ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் மீது மோதியுள்ளனர். பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் 2 இளைஞர்கள் முன்னால் செல்ல, அவரது நண்பர்கள் 3 பேர் மற்ற பைக்குகளில் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மோட்டார் வாகன துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இந்த இளைஞர்கள் திட்டமிட்டு விபத்தை நடத்தியது, விசாரணையிலும் உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்த இளைஞர்கள் 5 பேரின் ஓட்டுனர் உரிமங்களும், பைக்குகளின் பதிவு சான்றிதழ்களும், 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இளைஞர்கள் செய்த காரியம் உண்மையிலேயே மிகவும் அபாயகரமானது. இவர்கள் திட்டமிட்டதெல்லாம், ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ஓட்டி சென்றவருக்கு தெரியாது. அத்துடன் வயதான ஒருவருடன் வேறு அவர் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒருவேளை அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்திருந்தால், பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கலாம். எனவே இதுபோன்ற விளையாட்டுதனமான செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.


Click it and Unblock the Notifications








