இங்கிலாந்தில் அதிரடி நடவடிக்கை... வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் கடும் அபராதம்... எவ்ளோ தெரியுமா?
இங்கிலாந்தில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இங்கிலாந்தில் வாகனம் ஓட்டும்போது செல்ஃபி எடுத்தால் கடும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வாகனம் ஓட்டும்போது செல்போன்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், செல்பி எடுத்தாலும் அபராதம் விதிக்கப்படுகிறது. வாகனம் ஓட்டும்போது செல்போனில் போட்டோ, வீடியோ எடுப்பது, பாடல்களை தேடுவது, வீடியோ கேம் விளையாடுவது ஆகியவையும் குற்றமாக கருதப்படும்.

தவறு செய்யும் வாகன ஓட்டிகளுக்கு இந்திய மதிப்பில் தோராயமாக 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் அந்த வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தில் 6 தகுதியிழப்பு புள்ளிகளும் சேர்க்கப்படும். ஓட்டுனர் உரிமத்தில் 12க்கும் அதிகமான புள்ளிகளை பெறும் ஒருவருக்கு அனைத்து வகையான வாகனங்களையும் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்படும்.

இங்கிலாந்தில் 1 கோடிக்கும் அதிகமான வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அசம்பாவிதங்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காகதான், வாகனம் ஓட்டும்போது செல்போன்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சாலைகளில் வாகன ஓட்டிகள் தவறு செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் எந்த விதிமுறையை மீறி நடந்து கொண்டாலும் கண்காணிக்கப்படுவார்கள். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இதுபோன்ற சமயங்களில் அபராத தொகைக்கான ரசீதுகள் ஆட்டோமேட்டிக்காகவே உருவாக்கப்பட்டு விடும். இந்த கேமராக்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தவறு செய்யும் வாகன ஓட்டிகளின் புகைப்படங்களை எடுக்க முடியும். அவர்களின் அடையாளத்தையும் கண்டறிய முடியும்.

மேலும் அபராதத்திற்கான ரசீதையும் வழங்க முடியும். வாகனம் ஓட்டும்போது செல்போன் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்புவது, அழைப்புகளை ஏற்பது போன்றவை ஏற்கனவே சட்ட விரோதமானதுதான்.இந்த சூழலில் சாலை விபத்துக்களை குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக விதிமுறைகள் இன்னும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

வாகனம் ஓட்டும்போது எந்த வகையிலும் செல்போன்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அது உங்களின் கவனத்தை சிதறடித்து விடும். இது உங்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை மனதில் வைத்து கொண்டு செயல்படுங்கள். இங்கிலாந்தை போல் இந்தியாவிலும் வாகனம் ஓட்டும்போது நிறைய பேர் செல்போன்களை பயன்படுத்தி கொண்டுதான் உள்ளனர்.

வாகனம் ஓட்டும்போது செல்போன்களை பயன்படுத்துவதை தடுப்பதற்காக இந்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இன்னமும் இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. வாகன ஓட்டிகள் தாங்களாவே முன்வந்து இந்த தவறுகளை குறைத்து கொண்டால் மட்டுமே இந்த விதிமுறை மீறலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

அதேபோல் இந்தியாவில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் ஹெல்மெட் அணிவதில்லை. அவர்களுக்கு பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணிவது கிடையாது. ஆனால் விதிமுறைகளின்படி, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். அதேபோல் காரில் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டியதில்லை என பலர் நினைக்கின்றனர்.

இதுவும் தவறு. காரில் பயணிக்கும் அனைவரும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இந்தியாவில் தற்போது வாகனங்களில் பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கார்களில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் படிப்படியாக கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. இது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

இந்த சூழலில் இந்தியாவை சேர்ந்த வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முழுமையாக பின்பற்றி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முயலும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மிகவும் அவசியம். நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக பின்பற்றினால், காவல் துறையினரிடம் தேவையில்லாமல் அபராதம் செலுத்த வேண்டிய சூழல்களையும் தவிர்க்கலாம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








