இனி இந்த சாலையில் போகும்போது ரொம்ப கவனமா இருங்க... எச்சரிக்கையை மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?
மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் வேக வரம்பு தொடர்பாக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகிலேயே சாலை விபத்துக்கள் தொடர்பான மரணங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். வாகனங்களை அதிவேகத்தில் இயக்குவதே இதற்கு மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஒரு சில சாலைகளில் வாகன ஓட்டிகள் மின்னல் வேகத்தில் பறக்கின்றனர். இதில், மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையும் ஒன்று. இது 6 லேன்களை கொண்ட சாலையாகும். வாகனங்கள் விரைவாக பயணிக்க வேண்டும் என்பதற்காகதான், மொத்தம் 94 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது.

மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் வாகனங்கள் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாலையில், 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு மலைத்தொடர் வரும். அங்கு மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிப்பதற்கு வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையிலும், மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் தொடர்ச்சியாக விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. இதில், உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இதற்கு அதிவேக பயணமே முக்கியமான காரணமாக உள்ளது. எனவே அதிவேக பயணத்தை கட்டுப்படுத்துவதற்காக தற்போது புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் உள்ள இரு டோல்கேட்களுக்கு இடையேயான 50 கிலோ மீட்டர் தொலைவை, வெறும் 37 நிமிடங்களுக்கு உள்ளாக கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு, இனி 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரவுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த வழித்தடத்தில் அதிவேக பயணத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''முறையே ராய்காடு மற்றும் புனே மாவட்டங்களில் அமைந்துள்ள காலாப்பூர் மற்றும் உர்ஸ் டோல்கேட்களுக்கு இடையேயான தொலைவு 50 கிலோ மீட்டர்கள். 37 நிமிடங்களுக்கு உள்ளாக இந்த தொலைவை கடக்க கூடாது.

இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அவர்களுக்கு இ-சலான் (அபராத ரசீது) அனுப்பி வைக்கப்படும். 1,000 ரூபாய் என்பது முதல் முறையாக இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கான அபராதம் ஆகும். தொடர்ச்சியாக இந்த விதிமுறையை மீறி கொண்டே இருப்பவர்களுக்கு, அபராத தொகை உயர்த்தப்படும்.

நார்மலான டிரைவிங் கண்டிஷனில், இந்த இரு டோல்கேட்களுக்கு இடையிலான 50 கிலோ மீட்டர் தொலைவை கடப்பதற்கு குறைந்தபட்சம் 37 நிமிடங்கள் ஆகிறது. நாங்கள் சோதனை செய்து இதனை கண்டறிந்தோம். எனவேதான் 37 நிமிடங்களுக்கு உள்ளாக இந்த தொலைவை கடப்பவர்களுக்கு அபராதம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என்றனர்.

இதனால் இனி மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் பயணம் செய்வர்கள் வேக வரம்பை கவனமாக பின்பற்றுவது அவசியம். இல்லாவிட்டால் அபராதம் செலுத்த நேரிடும். நீங்கள் வேக வரம்பை ஒழுங்காக கடைபிடித்தால், அது உங்களை அபராதம் செலுத்துவதில் இருந்து மட்டுமல்லாது விபத்தில் இருந்தும் பாதுகாக்கும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








