பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க இத செய்யுங்க! பாஜக அமைச்சர் சர்ச்சை பதில்! கோபப்படாதீங்க ப்ளீஸ்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வுகுறித்த கேள்விக்கு மபி பாஜக அமைச்சர் சர்ச்சையான பதில் அளிதித்ருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகின்றது. குறிப்பாக, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலையால் பெட்ரோல் விலை மட்டுமின்றி டீசலின் விலையும் நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் ரூ. 100ஐ தொட தொடங்கியிருக்கின்றது.

ஏற்கனவே பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தொட்டதை அடுத்து டீசல் விலையும் 100ஐ கடக்கும் நிலை உருவாகியிருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, தினசரி வாகனங்களைப் பயன்படுத்துவோர் மத்தியில் பெட்ரோல், டீசல் விலையுயர்வு கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

பலர் எரிபொருள் விலையுயர்வு காரணமாக காரில் இருந்து இருசக்கர வாகன பயன்பாட்டிற்கும், பைக்கில் இருந்து மிதிவண்டி பயன்பாட்டிற்கும் மாற தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், மத்தியபிரதேச மாநிலத்தின் எரிசக்தி துறை அமைச்சர் பிரதுமன் சிங், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சையான பதில் ஒன்றைக் கூறியிருக்கின்றார்.

அது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அவர், பெட்ரோல்-டீசல் விலையுயர்வுக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே போராடிக் கொண்டிருக்கின்றநிலையில், "மக்களை வெளியில் செல்ல மிதிவண்டிகளைப் பயன்படுத்துமாறு" அறிவுறுத்தியிருக்கின்றார்.

"மிதிவண்டி பயன்பாடு அவர்களின் உடல் நலத்திற்கு நலனையும், செலவைக் குறைக்கவும் வழிவகுக்கும். அத்துடன், சுற்றுச் சூழலுக்கும் ஆரோக்கியமானது" என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து, "அதிக வரியாக வசூலிக்கப்படும் தொகை, நாட்டின் ஏழை மக்களின் நலனுக்காக பயன்படுத்தவதாக" பிரதுமன் சிங் கூறியிருக்கின்றார்.

விலையுயர்வை நியாயப்படுத்தும் வகையில் அமைச்சர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என அம்மாநில எதிர்கட்சிகள் பதில் கருத்து தெரிவித்திருக்கின்றன. பிரதுமன் சிங் பாஜக கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். இதுபோன்ற பாஜகவைச் சேர்ந்தவர்கள் சர்ச்சையான பதிலைக் கூறுவது முதல் முறையல்ல.

இதற்கு முன்னதாகவும் ஒன்றிய அரசின் அமைச்சர்கள் நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் விநோதமான பதில்களை எல்லாம் கூறியிருக்கின்றனர். அதிகப்படியாக உயர்ந்து வரும் எரிபொருள் விலையுயர்வினால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையுயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலையையும் கடுமையாக உயர்த்தி வருகின்றது.
இதன் விளைவாக ஏழை மற்றும் எளிய மக்கள் அதிகமாக பாதிப்படைய தொடங்கியிருக்கின்றனர். இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு, மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், "தற்போதைய எரிபொருள் விலை உயர்வு மக்களுக்கு சிக்கலானது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரசு 35,000 கோடிக்கும் மேல் தடுப்பூசிகளுக்கு செலவிட்டிருக்கின்றது. இத்தகைய மோசமான காலங்களில் நலத்திட்டங்களுக்கு செலவிட பணத்தை மிச்சப்படுத்தி வருகிறோம்" என தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications








