எப்ப வேணாலும் அறிவிப்பு வரலாம்! பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு திடீர் தடை? உச்சகட்ட அதிர்ச்சியில் பொதுமக்கள்...
இந்தியாவில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகில் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில், இந்தியாவை சேர்ந்த முன்னணி நகரங்கள் இடம்பெறுவது வாடிக்கையான ஒரு விஷயமாக மாறி விட்டது. இதற்கு தலைநகர் டெல்லியை (Delhi) உதாரணமாக கூற முடியும். ஒரு சில சமயங்களில், தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு சென்று விடுகிறது. எனவே டெல்லியில் வசிக்கும் பொதுமக்கள் சுவாசம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
டெல்லி மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு முன்னணி நகரங்களிலும் இதுதான் நிலைமை. ஒரு வகையில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்கள் இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன.எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக பதிவு செய்யப்பட்டு 10 வருடங்கள் ஆன டீசல் வாகனங்களுக்கும், பதிவு செய்யப்பட்டு 15 வருடங்கள் ஆன பெட்ரோல் வாகனங்களுக்கும் தடை விதிப்பது குறித்து அரசு தரப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தடை இந்தியா முழுமைக்குமானது அல்ல.
மத்திய பிரதேச மாநில அரசுதான் தற்போது இந்த அதிரடி தடை குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. ஒரு வேளை இந்த தடை அமலுக்கு வந்தால், டெல்லியை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு இத்தகைய தடையை விதிக்கும் 2வது மாநிலம் என்ற பெருமையை மத்திய பிரதேசம் பெறும்.

டெல்லியில் ஏற்கனவே காற்று மாசுபாடு பிரச்னை உச்சகட்டத்தில் உள்ளதால், அங்கு ஏற்கனவே இத்தகைய தடை இருக்கிறது. ஆனால் மத்திய பிரதேச மாநில அரசு இப்படியான ஒரு தடையை விதிப்பது குறித்து தற்போது ஆலோசனை மட்டுமே செய்கிறது. இறுதி முடிவு எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து மத்திய பிரதேச மாநில அரசின் உயர் அதிகாரிகள் கூறுகையில், ''மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு பெரிய நகரங்களில் காற்று மாசுபாடு பிரச்னை மோசமடைந்து வருகிறது. எனவேதான் 10 வருடங்கள் ஆன டீசல் வாகனங்களுக்கும், 15 வருடங்கள் ஆன பெட்ரோல் வாகனங்களுக்கும் தடை விதிக்கலாம் என உள்ளோம்.
ஆனால் இது தற்போதைய நிலையில் உயர் மட்ட அளவில் ஆலோசனையில் மட்டுமே இருக்கிறது. தடை விதிக்கப்படுமா? அல்லது இல்லையா? என்பது குறித்த அதிகாரப்பூர்வமான உத்தரவு எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை தடை விதிப்பது என முடிவு செய்தால், அது எப்போதில் இருந்து அமலுக்கு வரும்? என்பதையும் தற்போதே கூற முடியாது.
எனவே இது அரசின் ஆலோசனை மட்டுமே என்பதை தெளிவுபடுத்தி கொள்கிறோம்'' என்றனர். ஆலோசனைதான் என்றாலும், பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை வைத்திருப்பவர்கள் மத்தியில் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை எப்போது வேண்டுமானாலும் தடை விதிக்கப்படலாம் என்பதால், தற்போதே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles)மாறி கொள்வது நல்லது என மக்கள் நினைக்க தொடங்கியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது என்பது உண்மையிலேயே நல்ல விஷயம்தான். இது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பதாக இருக்கும். ஆனால் உடனடியாக அமல் என்பது போன்ற திடீர் தடை அறிவிப்புகளை வெளியிடாமல் இருக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம்.
பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். அரசு இதை எல்லாம் கண்டிப்பாக கருத்தில் கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம். அத்துடன் பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதித்தால், மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற முன்வருவார்கள்.
இதுவும் சுற்றுச்சூழலுக்கு நன்மையை ஏற்படுத்த கூடிய ஒரு விஷயமாகவே இருக்கும். ஆனால் பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் ஐசி இன்ஜின் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம். எனவே அனைவராலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற முடியாது. அரசும் இதையும் கவனத்தில் கொள்வது நல்லது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற முன்வருபவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். இது பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற முடிவு செய்பவர்களின் பணியை எளிமையாக்கும். எனவே பொருளாதார ரீதியிலான சலுகைகளை வழங்கினால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறுவது வேகமெடுக்கும்.


Click it and Unblock the Notifications








