எப்படியெல்லாம் சமாளிக்கிறாங்க... 'தரமான சாலைகளே விபத்திற்கு காரணம்' - மக்களை அதிரவைத்த பாஜக எம்பி..!
தரமான சாலைகளே விபத்துகள் அதிகமாக நடைபெறுவதற்கான காரணம் என பாஜக மக்களவை எம்பி ஒருவர் கூறிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அண்மைக் காலங்களாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு, வாகன ஓட்டிகள் முறையாக போக்குவரத்து விதிமுறைகளை சரிவர கடைபிடிக்காதே முக்கிய காரணமாக இருக்கின்றது.
இந்நிலையில், அசாம் மாநிலம், தேஸ்பூர் தொகுதியின் எம்பியான பல்லப் லோஹன், தரமான சாலைகளே இந்தியாவில் அதிகரித்து வரும் விபத்துகளுக்கு காரணம் என தெரிவித்துள்ளார். மக்கள் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளார்.

பாஜக எம்பி மட்டும் இவ்வாறு கூறவில்லை இதற்கு முன்பாக கோவிந்த் கர்ஜோல், கர்நாடகா மாநிலத்தின் துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் இதுபோன்ற கருத்தை வெளியிட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்திற்கு பலர் பல்வேறுவிதமான காரணங்களைக் கூறி வரும் நிலையில், பாஜக எம்பி-யின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால், நாட்டில் ஹெல்மெட் அணிவது, போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிப்பது என அனைத்து சட்டங்களையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடும் அரசுகள், முறையாக சாலையகளை அமைப்பதில் தவறிவிடுகின்றன.
ஆகையால், விதிகளை முறையாக கடைபிடிக்கும் வாகன ஓட்டிகள்கூட பல நேரங்களில் விபத்தில் சிக்கி, வாழ்க்கையை தொலைக்கின்றனர்.

இதுபோன்று, விபத்துகளுக்கு பல காரணங்கள் இருக்கையில், மக்களவை எம்பி பல்லப் லோஹன் தாஸ், தரமான சாலைகள் இருப்பதன் காரணத்தினால் மட்டுமே விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன என கூறியுள்ளார்.
மேலும், தரமான சாலைகளில் அதிவேகமாக பயணிப்பதனாலேயே இது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அவர் மக்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "சேதமடைந்த சாலைகளில் வாகனங்கள் வேகமாக செல்லமுடியாத சூழல் நிலவுகின்றது. எனவே, இளைஞர்கள் பொறுமையாக செல்ல கட்டாயப்படுத்துகின்றனர். இது சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கும். நல்ல சாலைகள் தானாகவே அதிக வேகத்திற்கு வழிவகுக்கும். ஆகையால், அது அதிக விபத்துக்களுக்கு வழிவகுக்கின்றன" என்றார்.

பாஜக எம்பியின் இந்த கருத்திற்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. எம்பியின் கூற்றின்படி பார்த்தால், நாடு முழுவதும் தரமற்ற சாலைகளை ஏற்படுத்தி வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்க செய்ய வேண்டுமா என மக்கள் மத்தியில் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும், இதற்கு இது மட்டும்தான் வழியா என கேட்கவைத்துள்ளது.

ஏற்கனவே பல ஆய்வுகள், உலக நாடுகளில் உள்ள சாலைகளைக் காட்டிலும் இந்தியாவில் இருக்கின்ற சாலைகள் அதிகம் ஆபத்து நிறைந்தவையாக காணப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், அதை மேலும் மோசமாக்கினால்தான் விபத்துகள் குறையும் என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் பாஜக எம்பி கூறியிருப்பது வேதனையளிக்கும் விதமாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் தரமற்ற (குண்டும், குழியுமாக உள்ள) சாலைகளால் பல்வேறு விபத்துகள் நேர்ந்த வண்ணம் உள்ளன. ஏன், பல நேரங்களில் பெரிய அளவிலான வாகனங்கள் சிக்கி, மேற்கொண்டு செல்ல முடியாமல், மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் சூழல்கூட உருவாகின்றன. ஆகையால், பல்வேறு காரணங்களுக்கு பெரியளவிலான பள்ளங்களே காரணமாக இருக்கின்றன.

இந்தசூழ்நிலையில், பாஜக எம்பியின் இந்த கருத்து ஏற்கனவே அலட்சியமாக செயல்படும் அரசு அதிகாரிகளை மேலும் அவர்களை ஊக்குவிக்கின்ற வகையில் அமைந்திருப்பாத மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலும், மழைக்காலங்களில் இந்திய சாலைகளில் மிகவும் ஆபத்தானவையாக மாறிவிடுகின்றன. எங்கு குண்டும், குழிகளும் இருக்கின்றன என்பதை நம்மால் யூகிக்கவே முடியாது. இதனை, பெரும் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பதைப் போன்று ஓர் தீவிர வேட்டைக் குழுவை அமைத்தால் மட்டுமே சாலைகளில் உள்ள பெரும் பள்ளங்களைக் கண்டுபிடிக்க முடியும்.

சூழல் இவ்வாறு இருக்க, மக்களுக்கு பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்பி இந்த கருத்தை வெளிப்படுத்தியிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாகவும் அம்மாநில மக்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் பல உள்ள எக்ஸ்பிரஸ் சாலைகள் மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தை அனுமதிப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்ற, வேகம் தொழில்வளர்ச்சிக்காக ஊக்குவிக்கப்படுகின்றது. இதற்கு தரமான சாலைகளே முக்கிய தேவையாக இருக்கின்றன. ஆகையால், விபத்துகளை குறைக்க மாற்றுவழியில் யோசிக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அந்தவகையில், தற்போது புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது, விதியை மீறுபவர்களை கடுமையாக தண்டிக்க பல்வேறு திருத்தங்களை தன்னுள் அடக்கியுள்ளது. அவ்வாறு, இதுவரை இல்லாத அளவிலான உச்சபட்ச அபராதத்தை வசூலிக்கின்ற வகையிலான மாற்றத்தைப் பெற்றிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








