50 பெண்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் மத்திய பிரதேசம்... பொறாமையில் இளைஞர்கள்... என்ன பயிற்சி தெரியுமா?
பெண்களின் திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் பெண்களுக்கென சிறப்பு பயிற்சி பட்டறை ஒன்றை மத்திய பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

பெண்களின் திறமையையும், தன்னம்பிக்கையும் மேம்படுத்தும் பணியில் மத்திய பிரதேச மாநில அரசு ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதன் முன்னோட்டமாக தனது போக்குவரத்துத் துறையின் வாயிலாக மாநிலம் முழுவதிலும் இருந்து 50 பெண்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு இலவச தொழில்முறை ஓட்டுநர் பயிற்சியை வழங்கி வருகின்றது.

பொது போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றது. இதனை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலேயே இந்த பயிற்சி பட்டறையைத் தொடங்கியிருப்பதாக மாநிலத்தின் உதவி போக்குவரத்து ஆணையர் அர்ச்சனா மிஸ்ரா ஏஎன்ஐ செய்தி தளத்திடம் கூறியிருக்கின்றார்.

இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு கற்றுக் கொடுப்பது மட்டுமின்றி வாகனங்களின் பழுதை நீக்கும் பயிற்சியும் வழங்கப்பட இருக்கின்றது. இதுதவிர சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பெண்களை திறன்மிக்கவர்களாக மாற்றுவதன் மூலம் தனியார் துறையின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என மாநில அரசு நம்புகின்றது. தொடர்ந்து, வாகனத்தை இயக்குவதோடு மட்டுமின்றி பழுது நீக்கும் பணியிலும் அவர்கள் கைதேர்ந்தவர்களாக மாறுவர் எனவும் அது நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. எனவேதான் இந்த தனித்துவமான முயற்சியில் மத்திய பிரதேச அரசு ஈடுபடத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, இப்பயிற்சி பட்டறையின் மூலம் பெண்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், அவர்கள் தன்னிறைவை அடையவும் இது வழிவகுக்கும் என அர்ச்சனா மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இப்பயிற்சியில் பங்கு பெறும் அனைத்து பெண்களுக்கும் கற்றல் உரிமம் வழங்கப்பட இருக்கின்றன. இதன்மூலம் அனைத்து விதமான வாகனங்களையும் இயக்குவதற்கான தகுதியைப் பெறுவர். ஆகையால், எந்த ரக வாகனங்களாக இருந்தாலும் அவர்கள் தடையின்றி இயக்க முடியும். இதனை மத்திய பிரதேச மாநிலத்தின் போக்குவரத்துறையின் முக்கிய அதிகாரியான அணில் குமார் ஷர்மா உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

பெண்களுக்கான இந்த சிறப்பு ஓட்டுநர் பயிற்சி பட்டறை ஒரு மாத காலம் நடைபெறும். இந்த நாட்களிலேயே ஓட்டுநர் பயிற்சி மற்றும் வாகனத்தை சரி செய்வது ஆகியவற்றிற்கான பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றன. இப்பயிற்சியைப் பெறுவதற்கான பெண்களை மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தே அதிகாரிகள் தேர்வு செய்திருக்கின்றனர்.

அந்தவகையில், 15 பெண்களை ஜாபுவா, ரட்ளம், க்வாலியர், சித்வாரா ஆகிய நகரங்களில் இருந்தும், 35க்கும் அதிகமான பெண்களை இந்தூர் நகரத்திலும் இருந்தும் தேர்வு செய்திருக்கின்றனர். இந்த பயிற்சி காலத்தின் இப்பெண்கள் தங்குவதற்கான இருப்பிடம் மற்றும் பிற வசதிகளையும் அரசே ஏற்படுத்திக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

பெண் ஓட்டுநர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் மத்திய பிரதேச மாநில அரசு மேற்கொண்டிருக்கும் இம்முயற்சி மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இந்த முயற்சிக்கு அனைவரின் தரப்பில் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது.
குறிப்பு: புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








