உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலை அறிமுகப்படுத்தும் எம்எஸ்சி நிறுவனம்!
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்களை எம்எஸ்சி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்களை அமெரிக்காவை சேர்ந்த ராயல் கரிபீயன் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் தொடர்ந்து கப்பல்களின் அளவை அதிகரித்து இந்த பெருமையை நிலைநாட்டி வருகிறது.

இந்த நிலையில், ராயல் கரிபீயன் சொகுசு கப்பல்களுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலை எம்எஸ்சி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

MSC's World Class என்ற புதிய பெயர் வரிசையில் இந்த மிக பிரம்மாண்டமான சொகுசு கப்பல்கள் கட்டப்பட உள்ளன. ராயல் கரிபீயன் நிறுவனத்தின் பிரம்மாண்ட கப்பல்களை உருவாக்கிய, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எஸ்டிஎக்ஸ் கப்பல் கட்டும் நிறுவனம்தான் இந்த சொகுசு கப்பல்களை உருவாக்க உள்ளது.

இந்த சொகுசு கப்பலில் 2,750 அறைகள் இருக்கும். தற்போது உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் என்ற பெருமைக்குரிய ராயல் கரிபீயன் நிறுவனத்தின் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் கப்பலில் 6,780 பயணிகள் செல்ல முடியும். ஆனால், புதிய சொகுசு கப்பலில் 6,850 விருந்தினர்கள் பயணிப்பதற்கான வசதிகள் இருக்கும்.

வேர்ல்டு கிளாஸ் வரிசையில் இரண்டு கப்பல்களுக்கு எம்எஸ்சி நிறுவனம் ஆர்டர் கொடுத்துள்ளது. முதல் கப்பல் 2022ம் ஆண்டிலும், இரண்டாவது கபப்பல் 2024ம் ஆண்டிலும் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இவை விருந்தினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்களாக கருதப்படும்.

அடுத்து 2025 மற்றும் 2026ம் ஆண்டுகளில் இரண்டு கப்பல்களை அறிமுகம் செய்ய எம்எஸ்சி நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இந்த கப்பல்களையும் எஸ்டிஎக்ஸ் நிறுவனம்தான் கட்டிக் கொடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய சொகுசு கப்பல்கள் 1,082 அடி நீளமும், 154 அடி உயரமும் கொண்டதாக இருக்கும். அதாவது, மூன்று கால்பந்து மைதானங்கள் அளவுக்கு நீளமுடையதாக இந்த கப்பல் இருக்கும்.

இந்த கப்பல் 2 லட்சம் டன் வெற்று எடையுடையதாக கட்டடப்பட உள்ளது. பயணிகள் மற்றும் இதர பொருட்களை ஏற்றும்போது, இந்த கப்பல் 2.26 லட்சம் டன் எடை கொண்டதாக இருக்கும்.

ராயல் கரிபீயன் சொகுசு கப்பல்களைவிட இவை வடிவத்தில் வேறுபடும். இந்த கப்பல்களின் படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் மெராவிக்லியா என்ற புதிய சொகுசு கப்பலை எம்எஸ்சி நிறுவனம் அறிமுகம் செய்தது. 5,174 விருந்தினர்கள் செல்வதற்கான வசதிகொண்ட இந்த கப்பல்தான் இந்த ஆண்டில் அறிமுகமான மிகப்பெரிய கப்பலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் அறிமுக நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரான் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில்தான், உலகின் மிகப்பெரிய கப்பல்களுக்கு ஆர்டர் கொடுத்து இருப்பதாக எம்எஸ்சி நிறுவனம் அறிவித்தது.


Click it and Unblock the Notifications








