அட இம்புட்டு நல்லவரா நம்ப முகேஷ் அம்பானி: உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்றும் வீடியோ!
உலகத்தின் முக்கிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர் ஒருவரை காப்பாற்ற உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

நம்மில் பலர் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களை காப்பாற்றாமல் வேடிக்கைப் பார்ப்பவர்கள்தான் அதிகம். விபத்தில் சிக்கியவருக்கு உதவு செய்தால் எந்த மாதிரியான பிரச்னை வருமோ என்ற பயத்தினாலே பலர், ஆபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யாமல் கடந்து செல்கின்றனர். இதுபோன்று, மரத்து போன மனித நேயத்தினால், பலர் சாலை விபத்துகளில் சிக்கி இறந்து போகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் மும்பைச் சாலையில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், விபத்தில் சிக்கி உயிருக்காகப் போராடிய வண்ணம் இருந்துள்ளார். அவர் உயிர் கவசமான ஹெல்மெட்டை அணியாமல் பைக்கில் பயணித்ததே, இந்த அளவிற்கு காயமடைய காரணமாக இருந்துள்ளது. மேலும், அந்த இளைஞர் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கையில், பல்வேறு வாகனங்கள் அவரைக் கடந்து சென்றன.

ஒரு சிலரோ, வாகனத்தை நிறுத்தி வேடிக்கைப் பார்த்துவிட்டு சென்றனர். அப்போது, அந்த பாதையில், உலகின் முக்கிய செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி குடும்பத்தாரின் வாகன கான்வாய் வந்தது. இவர்கள் நாட்டின் மிக முக்கியமான நபர்கள் என்பதால், இந்திய அரசு இவர்களுக்கு இசட்-பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது. இது மாநிலங்களின் முதல் மந்திரிகளுக்கு வழங்கப்படும் முக்கிய பாதுகாப்பாகும்.

இதுபோன்று, பாதுகாப்புடன் சென்றுக் கொண்டிருக்கும் முகேஷ் அம்பானியின் வாகன கான்வாய், சட்டென நிறுத்தப்பட்டது. அதில், டொயோட்டா பார்ச்சுனர் காரில் அந்த வாலிபர் ஏற்றப்பட்டு மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார்.

முகேஷ் அம்பானியின் கான்வாயில் பல்வேறு சொகுசு கார்கள் அடங்கும். அதில், பிஎம்டபிள்யூ எக்ஸ்5, லேண்ட் ரோவர் டிஸ்கவரி உள்ளிட்ட பல்வேறு சொகுசு கார்கள் உள்ளனன. இவை அனைத்திற்கும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இதுபோன்று, உயரிய பாதுகாப்பில் இருக்கும் அம்பானியின் கார், விபத்தில் சிக்கியவருக்காக பயன்படுத்தப்பட்டது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த காட்சிகள் அதே சாலையில் சென்ற பைக்கர் ஒருவர் அணிந்திருந்த ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளைதண்டர் ஆன்ரோட் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.
பெரும்பாலானோர் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால், விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வரும் நபருக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என்ற புதிய விதியினை சில மாதங்களுக்கு முன்புதான் உச்ச நீதிமன்றம் நடைமுறைக்கு கொண்டு வந்தது.

அந்தவகையில், விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துவிட்ட உடனே, அவர்கள் அங்கிருந்து கிளம்பிவிடலாம். அதேபோன்று, போலீஸார்களும் உதவுபவர்களின் நேரத்தை வீணடிக்கும் வகையில், எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகையால், இனியும் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதில் யாரும் தயக்கம் காட்ட வேண்டாம். நாம் வீணாக்கும் ஒவ்வொரு நிமிடமும், விபத்தில் சிக்கியவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications








