இந்தியாவுலேயே இல்லாத விமானம்.. வாங்கி போட்டார் அம்பானி.. அதோட விலையை கேட்டு பலருக்கு மயக்கமே வந்திருச்சு!
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி போயிங் 737 மேக்ஸ் 9 (Boeing 737 MAX 9) எனும் விமானத்தை டெலிவரி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த விமானத்தில் இந்தியாவில் தரையிறங்கிய வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் யாரிடமும் இல்லாத ஓர் விமானமே இந்த போயிங் 737 மேக்ஸ் 9 வகை விமானம் ஆகும். இது அல்ட்ரா லாங் ரேட்ஜ் பிசினஸ் ஜெட் விமானம் ஆகும். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே சுமார் ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்படுகின்றது.
இத்தகைய நம்ப முடியாத மிக மிக விலை உயர்ந்த விமானத்தையே தனிப்பட்ட பயணத்திற்காக முகேஷ் அம்பானி தற்போது வாங்கி இருக்கின்றார். இதுவே முகேஷ் அம்பானி வாங்கும் முதல் விமானம் அல்ல. ஏற்கனவே இந்த குடும்பத்தினரிடத்தில் 9 பிரைவேட் ஜெட் விமானங்கள் உள்ளன.

அதிலேயே பத்தாவதாக புதிய போயிங் 737 மேக்ஸ் 9 ஜெட் விமானம் இணைக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த விமானத்தை முகேஷ் அம்பானிதான் வாங்கியிருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த விமானத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் சின்னங்கள் பதியப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, இன்னும் பல மாற்றங்களை தங்களின் விருப்பத்திற்கு இந்த விமானத்தில் முகேஷ் அம்பானி செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஆகையால், இதன் மதிப்பு 1000 கோடி ரூபாக்கும் அதிகமாக இருக்கும் என தெரிகின்றது. இதன் கேபின் மாடிஃபிகேஷன் மற்றும் இன்டீரியர் அப்கிரேட் வேலைகள் அனைத்தும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த யூரோ ஏர்போர்ட் பேசல் முல்ஹவுஸ் ஃப்ரைபர்க்-இல் வைத்தே செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால், என்ன மாதிரியான மாற்றங்கள் மற்றும் சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

தொடர்ந்து, உட்பக்கத்தின் படங்களும் இன்னும் வெளியாகவில்லை. ஆகையால், இந்த ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தின் உட்பக்கம் எப்படி இருக்கும் என்பதே பலரின் கேள்வியாகவும், எதிர்பார்ப்பாகவும் மாறியிருக்கின்றது. தலைநகர் டெல்லி விமான நிலையத்திலேயே இந்த விமானம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது.
பேசல் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு சுமார் 9 மணி நேரம் தொடர் பயணம் மேற்கொண்டே இந்த விமானம் வந்திருக்கின்றது. இது சுமார் 6,234 கிமீ தூரம் இடைவெளியைக் கொண்டதே இந்த வழித்தடம் ஆகும். டெல்லியில் இருந்து விரைவில் மும்பை விமான நிலையத்திற்கு அது புறப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்குதான் ரிலையன்ஸ்-இன் தலைமை நிறுவனம் அமைந்திருக்கின்றது. இந்த விமானம் இரண்டு சிஎஃப்எம்ஐ எல்இஏபி-1பி எஞ்சினையேக் கொண்டிருக்கும். இதனால் தொடர்ச்சியாக 6,355 நாட்டிக்கல் மைல் தூரம் பயணிக்க முடியும். அதாவது இடைநில்லாமல் 11,770 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். முகேஷ் அம்பானியிடத்தில் மேலும் சில விமானங்களும் உள்ளன.
அந்தவகையில், ஏர்பஸ் ஏ319 ஏசிஜே, பாம்பார்டியர் குளோபல் 5000எஸ், பாம்பார்டியர் குளோபல் 6000, இரண்டு டசால்டு ஃபால்கன் 900எஸ், எம்பரேயர் இஆர்ஜே-135 மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. டவுஃபின் மற்றஉம் சிகோர்ஸ்கை எஸ்76 வகை ஹெலிகாப்டர்களே அம்பானியிடத்தில் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியிடத்தில் சொகுசு கார்கள் மட்டுமல்ல விமானங்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன என்பது தற்போது தகவல்களின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. எனவே முகேஷ் அம்பானி மிகப் பெரிய விமான பிரியரும் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், இப்போது அவர் வாங்கியிருப்பதே முகேஷ் அம்பானி வைத்திருப்பதிலேயே மிக மிக அதிக விலைக் கொண்ட விமானம் ஆகும். மேலும், இந்தியாவின் முதல் ஆடம்பர விமானமாகவும் இது காட்சியளிக்கிறது.


Click it and Unblock the Notifications








