ரிப்பேரை சரி செய்ய பாஜக அரசிடம் காசு இல்லையாம்... முலாயம் கையை விட்டு போகும் குண்டு துளைக்காத கார்
உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் குண்டு துளைக்காத காரை இழக்கவுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரான முலாயம் சிங் யாதவ், மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல்500 கார்டு எஸ்யூவி (Mercedes Benz ML500 Guard SUV) காரை பயன்படுத்தி வருகிறார். பொதுவாக எம்எல்-க்ளாஸ் எஸ்யூவியின் விலை மிகவும் அதிகம். இதில், எம்எல்500 கார்டு ட்ரிம்மின் விலை 3 கோடி ரூபாய்க்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எஸ்யூவியை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த 2014 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வின்போது, 2.49 கோடி ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த காரில் பாதுகாப்பு வசதிகளுக்கு சற்றும் குறைவில்லை. புல்லட்கள், கை துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளில் இருந்து பயணிகளை காப்பாற்றும் பாதுகாப்பு வசதிகள் இந்த காரில் உள்ளன.

கேஸ் அட்டாக் நடத்தினாலும் கூட, இந்த காரில் பயணிப்பவர்களை அவ்வளவு எளிதில் ஒன்றும் செய்து விட முடியாது. ஏனெனில் இந்த காரில் ப்ரெஷ் ஏர் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. கேஸ் அட்டாக் நடத்தப்பட்டால், பயணிகளுக்கு 5 முதல் 8 நிமிடங்கள் வரை புத்துணர்ச்சியான காற்றை இது வழங்கும். வழக்கமான எம்எல்-க்ளாஸ் காரை காட்டிலும் இதன் எடை சுமார் 400 கிலோ அதிகம்.

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 4.7 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 402 பிஎச்பி பவர் மற்றும் 600 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்ய கூடியது. இதில், 7 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.5 வினாடிகளில் எட்டி விடும் திறன் இந்த காருக்கு உண்டு.

புல்லட் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் பஞ்சர் ஆனாலும் கூட, இந்த காரில் 80 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இப்படி பல்வேறு பாதுகாப்பு வசதிகள் மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்த இந்த கார் முலாயம் சிங் யாதவின் கையை விட்டு நழுவவுள்ளது. ஆம், மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல்500 கார்டு எஸ்யூவி காரை பயன்படுத்தும் வாய்ப்பை முலாயம் சிங் யாதவ் இழக்கவுள்ளார்.

இந்த காரில் தொழில்நுட்ப ரீதியாக ஒரு சில பழுதுகள் ஏற்பட்டுள்ளன. இந்த பழுதுகளை சரி செய்ய 26 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவ்வளவு அதிகம் செலவு செய்து காரை சரி செய்ய முடியாது என உத்தர பிரதேச மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவேதான முலாயம் சிங் யாதவ் இந்த காரை இழக்கவுள்ளார்.

இதுகுறித்து உத்தர பிரதேச மாநில அரசு அதிகாரிகள் கூறுகையில், ''முலாயம் சிங் யாதவின் காரில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை சரி செய்ய எங்கள் பட்ஜெட் அனுமதிக்கவில்லை. எனவே முலாயம் சிங் யாதவிற்கு வேறு ஒரு பொருத்தமான காரை வழங்குவோம். அனேகமாக அது டொயோட்டா பிராடோவாக (Toyota Prado) இருக்கலாம்'' என்றனர்.

ஆனால் இது பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சமாஜ்வாதி கட்சியினர் கூறி வருகின்றனர். இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியினர் கூறுகையில், ''விளம்பரங்களுக்காக அரசால் கோடிக்கணக்கான ரூபாயை செலவிட முடிகிறது. ஆனால் கார் ரிப்பேரை சரி செய்ய 26 லட்ச ரூபாயை செலவழிக்க முடியாது என்கின்றனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை'' என்றனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு சமாஜ்வாதி முக்கிய எதிர்கட்சியாக உள்ளது. அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான முலாயம் சிங் யாதவ், குண்டு துளைக்காத காரை இழக்க இருப்பது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








