அதிரடி காட்டும் காவல் துறை... இந்த தவறை செய்தால் இனி 6 மாதம் கம்பி எண்ணணும்... என்னனு தெரியுமா?
மும்பையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மும்பை மாநகர சாலைகளில் தொடர்ந்து கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது காவல் துறையினர் தற்போது கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டுபவர்களை மும்பை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக ராங் சைடில் (Wrong Side) வாகனங்களை இயக்கி, மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் மீது காவல் துறையின் கவனம் திரும்பியுள்ளது. இத்தகைய நபர்களை பிடிப்பதற்காக சிசிடிவி கேமராக்களை ஆராயும் பணிகளை காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.

இந்த அதிரடி நடவடிக்கையை மும்பை காவல் துறையினர் கடந்த ஜனவரி 4ம் தேதி தொடங்கினர். அப்போது முதல் தற்போது வரை ஏராளமான வாகன ஓட்டிகள் காவல் துறையினரின் பிடியில் சிக்கியுள்ளனர். 121 இரு சக்கர வாகனங்கள், 11 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 23 நான்கு சக்கர வாகனங்களின் மீது நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு வரும் வாரங்களில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்களின் வீடுகளுக்கு நோட்டீஸை அனுப்பும் பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளின் கீழ், தற்போது வரை 155 வாகன ஓட்டிகள் மீது பல்வேறு காரணங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், பொது சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டவர்கள், கண் மூடித்தனமாக வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் ராங் சைடில் வாகனம் ஓட்டியவர்கள் அடங்குவர். அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அபராதம் செலுத்துவதுடன், அவர்கள் சிறை தண்டனையையும் எதிர்கொள்ள வேண்டியது வரும். கடந்த ஒரு மாத கால அளவிலான சிசிடிவி கேமரா பதிவுகளை தற்போது காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

எனவே இன்னும் பலர் சிக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்கிடையே ராங் சைடில் வாகனம் ஓட்டியது உள்பட போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட 155 பேர் மீதும் ஐபிசி செக்ஸன் 279-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மோட்டார் வாகன சட்டத்தை மட்டுமே காவல் துறையினர் பயன்படுத்தி வந்தனர்.

இதன் மூலம் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் மட்டுமே விதிக்க முடிந்து வந்தது. சிறை தண்டனை வழங்க முடியவில்லை. ஆனால் தற்போது சிறை தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் காவல் துறையினர் தொடங்கியுள்ளனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களில் சுமார் 78 சதவீதம் பேர் இரு சக்கர வாகன ஓட்டிகள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையின் பிகேசி-சன்னாபதி பாலத்தில் நண்பரின் பைக்கை கடனாக பெற்று ஒருவர் ஸ்டண்ட்டில் ஈடுபட்டார். இந்த பாலத்தில் இரு சக்கர வாகனங்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் மீது ஐபிசி செக்ஸன் 279-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு 1,000 ரூபாய் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அல்லது இரண்டு தண்டனைகளும் வழங்கப்படலாம்.

கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிறை தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதால், வாகன ஓட்டிகள் இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவார்கள் என மும்பை மாநகர காவல் துறையினர் நம்புகின்றனர். மும்பை தவிர இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் தற்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications