வெறும் 2 மணி நேரத்தில் 500 கிமீ ஓடும் புல்லட் ரயில்! டிக்கெட் விலை இவ்ளோதானா! அப்ப அடிக்கடி போயிட்டு வரலாம்!
இந்திய ரயில்வே துறையை அதிநவீனமான ஒன்றாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வந்தே பாரத் (Vande Bharat) போன்ற ரயில்கள் எல்லாம் இதற்கு ஒரு உதாரணம். ஆனால் வந்தே பாரத் ரயில்கள் ட்ரைலர் மட்டுமே. மெயின் பிக்சர் இனிமேல்தான் வரப்போகிறது. ஆம், புல்லட் ரயில்களை (Bullet Trains) பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம்.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில், மும்பை-அகமதாபாத் (Mumbai-Ahmedabad) இடையே இயக்கப்படவுள்ளது. ஜப்பான் (Japan) நாட்டின் சிங்கன்சென் (Shinkansen) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த புல்லட் ரயில் இயங்கவுள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருவதற்கு ஒரு மிகப்பெரிய சாட்சியாக இந்த புல்லட் ரயில் இருக்க போகிறது.

மும்பை-அகமதாபாத் இடையே பயணம் செய்யவுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 320 கிலோ மீட்டர்கள் ஆகும். எனவே இதைக்காட்டிலும் ஓரளவிற்கு குறைவான வேகத்தில் இயக்கப்பட்டாலும் சரி அல்லது இடையில் பல்வேறு இடங்களில் நின்று சென்றாலும் சரி, மும்பை-அகமதாபாத் இடையேயான 508 கிலோ மீட்டர்கள் தொலைவை, இந்த புல்லட் ரயில் வெறும் 2 அல்லது 2.5 மணி நேரத்திலேயே கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தற்போதைய நிலையில் மும்பை-அகமதாபாத் இடையே சாலை மார்க்கமாக கார் அல்லது பஸ்களில் பயணம் செய்ய போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகளின் கண்டிஷன் ஆகியவற்றை பொறுத்து 8-10 மணி நேரம் வரை ஆகிறது. இதுவே ரயில்கள் என்றால், 6-7 மணி நேரம் ஆகிறது.

எனவே இந்தியாவின் முதல் புல்லட் ரயில், மும்பை-அகமதாபாத் இடையேயான பயண நேரத்தை வெகுவாக குறைக்க போகிறது என்பது உறுதி. இதன் மூலம் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா ஆகிய அம்சங்களை மேம்படுத்தவும், இந்த புல்லட் ரயில் உதவி செய்யும் என மத்திய அரசு கருதுகிறது.
மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் வழித்தடத்தில் மொத்தம் 12 ஸ்டேஷன்கள் அமையவிருக்கின்றன. இதில், 4 ஸ்டேஷன்கள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமையும். அவை மும்பை, தானே, விரார் மற்றும் பாய்சர் ஆகியவை ஆகும். எஞ்சிய 8 ஸ்டேஷன்களும் குஜராத் மாநிலத்தில் அமையவுள்ளன. அவை வாபி, பிலிமோரா, சூரத், பாருச், வதோதரா, ஆனந்த், அகமதபாத் மற்றும் சபர்மதி ஆகியவை ஆகும்.
இந்த சூழலில், மும்பை-அகமதாபாத் புல்லட் ரயிலின் டிக்கெட் விலை (Ticket Price) தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது குறித்து நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி பார்த்தால், ஜப்பானில் 500 கிலோ மீட்டர்கள் தொலைவிற்கு புல்லட் ரயிலில் பயணம் செய்ய இந்திய மதிப்பில் 8 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கும் மேல் செலவாகும்.
இதுவே சொகுசு வகுப்பு டிக்கெட் என்றால், அதே 500 கிலோ மீட்டர் தொலைவிற்கு, சுமார் 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆனால் இந்தியாவில் மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு புல்லட் ரயிலில் முழு தொலைவையும் பயணம் செய்ய சுமார் 3 ஆயிரம்-5 ஆயிரம் ரூபாய் மட்டுமே டிக்கெட் கட்டணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை குறுகிய தொலைவு என்றால், அதாவது மும்பையில் இருந்து தானே வரை மட்டும் என்றால், டிக்கெட் கட்டணம் இன்னும் குறைவாக இருக்கும். ஆனால் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் கட்டணம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் அடுத்த ஆண்டு (2026) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து வரும் 2027ம் ஆண்டில், மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரயில் பயணிக்க தொடங்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








