அதிக விமானங்களை கையாள்வதில் மும்பை விமான நிலையம் சாதனை!
விமானங்களை கையாளும் எண்ணிக்கையில் மும்பை விமான நிலையம் புதிய சாதனை படைத்துள்ளது. அதன் வளர்ச்சி குறித்த சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
விமானங்கள் வந்து சென்ற கணக்கில் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் அசுர சாதனையை படைத்துள்ளது. பிரம்மிக்க வைக்கும் அந்த சாதனை குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

நாட்டின் வர்த்தக தலைநகராக கருதப்படும் மும்பையில் விமான போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு தக்கவாறு மும்பை விமான நிலையத்தில் வசதிகளும், கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 24 மணிநேரத்தில் 969 விமானங்கள் தரை இறக்கப்பட்டு, திரும்பி டேக் ஆஃப் செய்யப்பட்டு பெரும் சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் மறுநாள் சனிக்கிழமை 5.30 மணி இடையிலான கால அளவில் இத்தனை விமானங்களை கையாண்டுள்ளது மும்பை விமான நிலையம்.

பல்வேறு தொழில்நுட்ப சவால்கள், பாதுகாப்பு அம்சங்கள் கணக்கில் வைத்து ஓய்வில்லாமல் இத்தனை விமானங்களை மிக திறமையாகவும், பாதுகாப்பாகவும் மும்பை விமான நிலையம் கையாண்டு இருப்பது அத்துறை வல்லுனர்களின் பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

இது தேசிய அளவிலான சாதனை மட்டுமல்ல, உலக அளவிலான சாதனை. ஆம், ஒற்றை ஓடுபாதை கொண்ட விமான நிலையங்களில் அதிக விமானங்களை திறம்பட கையாண்டிருக்கும் விமான நிலையம் என்ற பெருமையும் மும்பை விமான நிலையத்திற்கு கிடைத்துள்ளது.
Recommended Video


மும்பை விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள் உள்ளன. ஆனால், அந்த இரண்டு ஓடுபாதைகளும் X- வடிவில் ஒன்றையொன்று குறுக்காக கடந்து செல்வதால், ஒரு நேரத்தில் ஒரு ஓடுபாதையை மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்த இமாலய சாதனை புரிந்ததோடு நில்லாமல், 24 மணிநேரத்தில் 1,000 விமானங்களை கையாளும் இலக்குடன் செயல்பட்டு வருவதாக மும்பை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது மும்பை விமான நிலையம் ஆண்டுக்கு 45 மில்லியன் பயணிகளை கையாள்கிறது.

வரும் 2018ம் ஆண்டு மார்ச் வாக்கில் இந்த எண்ணிக்கை 48 மில்லியன் அளவுக்கு உயரம் வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள கேட்விக் விமானம் நிலையம் உள்ளிட்ட உலகின் பெரும் பரபரப்புமிக்க விமான நிலையங்களைவிட அதிக பயணிகளை மும்பை விமான நிலையம் கையாள்கிறது.

கடந்த 1930ம் ஆண்டு இங்கிலாந்து விமானப்படைக்கான தளம் சான்டாக்ரூஸில் கட்டப்பட்டது. அப்போது இருந்த ஜூகு விமான நிலையத்திற்கு அருகில் இந்த விமானப்படை தளம் கட்டப்பட்டது. 1942 முதல் 1947 வரை இரண்டாம் உலகப்போரின்போது இங்கிலாந்து விமானப்படையின் முக்கிய தளங்களில் ஒன்றாக செயல்பட்டது.

இந்த நிலையியில், 1946ம் ஆண்டில் இருந்து இந்த விமானப் படைத் தளத்தில் செயல்பாடுகளை குறைக்க தொடங்கி இங்கிலாந்து அரசு, அதனை இந்திய விமானப் போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்கும் பணிகளை துவங்கியது. அதன்பின்னர் இந்த விமான நிலையம் வர்த்தக ரீதியிலான செயல்பாடுகளை துவங்கியது.

சுதந்திரத்திற்கு பின்னர் கராச்சி விமான நிலையம் பாகிஸ்தானிற்கு சென்றதால், மும்பை விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டது. அத்துடன், அதனை படிப்படியாக மேம்படுத்தும் பணிகளும் தொடர்ந்தன.

1949ம் ஆண்டில் இந்த விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானங்களை தரை இறக்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டன. அத்துடன், ஓடுபாதைக்கான விசேஷ விளக்குகள் பொருத்தப்பட்டு, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

இப்படியாக சான்டாக்ரூஸ் விமானப்படை தளம் படிப்படியாக வர்த்தக விமான நிலையமாக விரிவாக்கம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், சான்டா க்ரூஸ் விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய 1967ல் டாடா கமிட்டி அமைக்கப்பட்டது.

அக்கமிட்டி கொடுத்த பரிந்துரைகளின் அடிப்படையில் சர்வதேச போக்குவரத்தை கையாளும் வகையில் இப்போதைய விமான நிலையம் சான்டா க்ரூஸ் விமான நிலையத்திற்கு வட கிழக்கில் அந்தேரியின் சாஹர் பகுதியில் அமைக்கப்பட்டது. இதுதான் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையமாக அழைக்கப்படுகிறது.

கடந்த 2014ம் ஆண்டு மிக பிரம்மாண்டமான டெர்மினல்-2 திறக்கப்பட்டது. சான்டா க்ரூஸ் விமான நிலையம் மலிவு கட்டண சேவையை வழங்கும் உள்நாட்டு விமான நிலையமாகவும், சத்ரபதி சிவாஜி விமான நிலையம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்களை கையாளும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.

ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், கோ ஏர் உள்ளிட்ட பல விமான நிறுவனங்களின் முக்கிய கேந்திரமாக செயல்படுகிறது. அத்துடன், உலகின் அனைத்து முக்கிய பகுதிகளுக்கும் இங்கிருந்து நேரடி சேவை இருப்பதுடன், பல்வேறு வெளிநாட்டு விமான நிறுவனங்களின் கேந்திரமாகவும் செயல்படுகிறது. உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
இதர சுவாரஸ்யச் செய்திகள்:


Click it and Unblock the Notifications