பாலத்தை விட்டு இறங்கி முடித்ததும் கார் உடன் கொத்தாக தூக்கிய போலீஸ்! மணிக்கு 252km வேகத்தில் சும்மா விடுவாங்களா
மும்பையில் இன்று (டிச.17) மிக அதிவேகமாக மணிக்கு 252கிமீ வேகத்தில் சென்ற லம்போர்கினி (Lamborghini) கார் தொடர்பான வீடியோவை பலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கடலுக்கு மேலே அமைக்கப்பட்ட பாலத்தில் பனி மூட்டத்திற்கு நடுவில் அந்த கார் அவ்வளவு வேகத்தில் செல்வதை வீடியோவில் பார்க்கும்போதே பயமாக இருக்கிறது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான சில மணிநேரங்களிலேயே சம்பந்தப்பட்ட லம்போர்கினி சொகுசு காரை வொர்லி (Worli) காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ஓட்டுநர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய அந்த வீடியோவை காட்சிப்படுத்தியவர் வேறு யாருமில்லை, அந்த காரில் டிரைவருக்கு அருகே முன் இருக்கையில் அமர்ந்திருந்தவர் ஆவார்.

மணிக்கு 250 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில், வாகன நெரிசலுக்கு இடையே ஆபத்தான முறையில் பல கார்களை இந்த லம்போர்கினி கார் முந்திச் சென்றுள்ளது. மும்பையில் சமீபத்தில் திறக்கப்பட்ட இந்தியாவின் நீளமான பாந்ரா-வொர்லி கடல் பாலம், 80 கி.மீ/மணி வேக வரம்பு கொண்டது ஆகும்.
ஆனால், இந்த மஞ்சள் நிற லம்போர்கினி உருஸ் (Urus) சொகுசு கார், அதிகப்பட்சமாக மணிக்கு 252 கி.மீ வேகத்தில் சீறி பாய்ந்துள்ளது. வொர்லி காவல்துறையினர், இந்த லம்போர்கினி காரின் ஹரியானா மாநில நம்பர் பிளேட்டை வைத்து காரை அடையாளம் கண்டு, டிரைவரை கைது செய்துள்ளனர். 'சூப்பர் வெல் காம்டிரேட் பிரைவேட் லிமிடெட்' என்கிற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த காரின் உரிமையாளர் குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த நீரவ் பட்டேல் (Nirav Patel) ஆவார்.

ஆனால் சம்பவத்தின்போது காரை ஓட்டியவர், மும்பையின் கார் வெஸ்ட் (Khar West) பகுதியைச் சேர்ந்த 36 வயதான கார் டீலர் ஃபைஸ் அதான்வாலா (Faiz Adanwala) ஆவார். அஜாக்கிரதையான மற்றும் ஆபத்தான ஓட்டுநர் நடவடிக்கைகளுக்காக அவர் மீது வொர்லி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இன்னமும் பலருக்கு சாலை விதிமுறைகளை முறையாக எவ்வாறு பின்பற்றுவது என்பது குறித்த விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனால்தான், நாட்டில் விற்கப்படும் பெரும்பாலான கார் மற்றும் சூப்பர் பைக்குகளின் டாப்-ஸ்பீடு 250கிமீ ஆக அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, வாகனத்தில் உள்ள என்ஜின் அதனை காட்டிலும் அதிக வேகத்தில் வாகனத்தை கொண்டு செல்லக்கூடிய திறன் கொண்டது என்றாலும், அதன் திறன் பாதுகாப்பு நோக்கத்துடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், லம்போர்கினி உருஸ் போன்ற சில விலையுயர்ந்த கார்கள் 300கிமீ-க்கும் மேல் இயங்கக்கூடியவைகளாக உள்ளன. இது மூடப்பட்ட பந்தய களத்திற்குள் காரை ஓட்டுவதற்காக வழங்கப்படுகிறது. ஆனால், தற்போது நடந்துள்ள சம்பவத்தை போல் சிலர் அதனை பொது சாலையில் செய்து பார்க்கின்றனர். அதுவும், ஆழமுள்ள கடலுக்கு மேல் அமைக்கப்பட்ட பாலத்தில் செய்வது மிகவும் ஆபத்தானது ஆகும்.

இந்த சம்பவம் தான் பயங்கரமானதே அன்றி, இதில் பயன்படுத்தப்பட்ட உருஸ் காரை நாம் எந்த குறையையும் சொல்ல முடியாது. இத்தாலிய ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான லம்போர்கினி உருவாக்கிய முதல் எஸ்யூவி (SUV) ஸ்டைல் காரான உருஸ், உலகளவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் லம்போர்கினி காராக உள்ளது.
252கிமீ மட்டும் இல்லாமல், லம்போர்கினி உருஸ் கார் அதிகப்பட்சமாக மணிக்கு 312கிமீ வேகத்தை எட்டக்கூடியது. ஆனால், இந்தியாவில் அதிகப்பட்சமாக விரைவுச்சாலைகளில் மணிக்கு 120கிமீ வேகத்தில் செல்ல சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. 120கிமீ வேகம் கூட முன்னால் செல்லும் வாகனத்தை முந்த மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றப்படி, அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச வேகம் 110கிமீ/மணி தான்.


Click it and Unblock the Notifications









