நள்ளிரவில் தூக்கத்தை கெடுத்த மர்ம மனிதர்... கோவத்தில் அமிதாப் பச்சன் மனைவி என்ன செய்தார் தெரியுமா?
அமிதாப் பச்சன் மனைவியின் தூக்கத்தை கெடுத்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இந்தியாவில் இளைஞர்கள் பலர், இரைச்சலை உண்டாக்கும் வகையில், பைக் சைலென்சரில் மாற்றங்களை செய்கின்றனர். சாலையில் பயணம் செய்யும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு, இந்த இரைச்சல் தொந்தரவை ஏற்படுத்துகிறது. இப்படி பைக் சைலென்சரில் மாற்றம் செய்த வாகன ஓட்டி ஒருவரால், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்.

மும்பையின் ஜூகு பகுதியில் உள்ள வீட்டில் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீட்டிற்கு அருகே நேற்று முன் தினம் (ஜூலை 23ம் தேதி) இரவு, அதிக இரைச்சலுடன் பைக் ஒன்று அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தது. அந்த பைக்கை ஓட்டியவர், சைலென்சரில் மாற்றம் செய்திருந்ததாக கூறப்படுகிறது.

இரைச்சல் காதை அடைத்ததால் பாதிக்கப்பட்ட ஜெயா பச்சன் உடனடியாக காவல் கட்டுப்பாடு அறைக்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து ஜூகு காவல் நிலைய அதிகாரிகள் கூறுகையில், ''ஜூலை 23ம் தேதி இரவு சுமார் 11.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக ஜெயா பச்சனிடம் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.

வாகன ஓட்டி ஒருவர் விதிமுறைகளை மீறி இரைச்சலை ஏற்படுத்தி கொண்டிருப்பதாக ஜெயா பச்சன் புகார் செய்தார். இதன்பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, ஜூகு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்ற நேரத்தில், புகாருக்கு உள்ளான வாகன ஓட்டி அங்கு இல்லை.

எனினும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் பைக்கின் பதிவு எண்ணை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இதனை அடிப்படையாக வைத்து அந்த பைக்கை ஓட்டி வந்தவரை தேடி வருகிறோம். இந்த பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக எங்களுக்கு புகார்கள் வந்து கொண்டுள்ளன.

குறிப்பாக இரவு நேரங்களில்தான் இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. எனவே இரவு ரோந்து செல்லும் காவல் துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இதுபோன்ற வாகன ஓட்டிகளை கண்டறிந்து, அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றனர்.

இந்தியாவில் வாகனங்களை மாற்றியமைப்பது சட்டத்திற்கு எதிரானது. ஆனால் அதை பொருட்படுத்தாமல், பலர் பல்வேறு மாறுதல்களை செய்து வருகின்றனர். குறிப்பாக ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளின் சைலென்சரில்தான் அதிகளவில் மாறுதல் செய்யப்படுகிறது. அதிக சப்தம் எழுப்பும் சைலென்சர்கள் வெளிச்சந்தையில் குறைந்த விலையில் கிடைப்பது இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.

அத்தகைய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது, சைலென்சரை பறிமுதல் செய்து அழிப்பது என காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டுதான் உள்ளனர். ஆனாலும் காவல் துறையினரால் அவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடிவதில்லை. அதிக சப்தம் எழுப்பும் சைலென்சர்கள், வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடித்து, விபத்திற்கு வழிவகுத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








