வாகன ஓட்டிகளுக்கு உதறல்... கலெக்ஸன் தொகையை அதிகரிக்க போலீஸ் போட்டுள்ள ஸ்கெட்ச் இதுதான்... என்னனு தெரியுமா?
இ-சலான்களுக்கு அபராதம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள வாகன ஓட்டிகளுக்கு எதிராக காவல் துறையினரின் நடவடிக்கை தீவிரமாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட இ-சலான்களுக்கு அபராதம் செலுத்தாமல் உள்ளவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணியில் மும்பை காவல் துறையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய காவல் துறை தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுனர் உரிமங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டன.

தற்போதைய நிலையில் ஏராளமானோர் இ-சலான்களுக்கு அபராதம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். அதனை வசூல் செய்வதற்காக மும்பை போக்குவரத்து காவல் துறை சார்பில் தற்போது இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இ-சலானுக்கு அபராதம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களை, காவல் துறையினர் முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அபராதம் செலுத்தும்படி கூறுகின்றனர்.

அதன்பிறகும் அபராதம் செலுத்த தவறினால், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. இதுதவிர அபராதம் வசூலிப்பதற்காக, வாகன ஓட்டிகளின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு, காவல் துறையினர் நேரடியாகவும் வரவுள்ளனர். ரொக்கமாகவோ அல்லது கார்டுகள் மூலமாகவோ வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்த முடியும்.

அபராத தொகைகளை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும், வாகன ஓட்டிகளிடம் நாகரிகமாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 100 இ-சலான்கள் வினியோகம் செய்யப்பட்டால், 30 முதல் 50 சதவீத இ-சலான்களுக்கு மட்டுமே அபராதம் வசூலாகிறது.

இதனை அதிகரிப்பதற்காக தற்போது இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அபராத தொகைகளை செலுத்துவதற்கு பயந்து கொண்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்ற தொடங்கினாலும் இந்த திட்டத்திற்கு வெற்றி கிடைத்தாகவே அர்த்தம். மஹாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை, கார் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளே பெரும்பாலும் விதிகளை மீறுகின்றனர்.

சிகப்பு விளக்கு எரியும்போது சிக்னலை கடந்து செல்வது, அதிவேகமாக பயணம் செய்வது மற்றும் பார்க்கிங் செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வது போன்ற விதிமுறை மீறல்களுக்காகவே அதிக அளவிலான இ-சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் காவல் துறையினரின் நடவடிக்கை கடுமையாவதால், விதிமுறை மீறல்கள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு, இந்தியாவில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் காவல் துறை அதிகாரிகள் இ-சலான்கள் மூலம் அபராதம் விதித்து வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை நிறுத்தி அபராதம் விதிப்பதற்கு காவல் துறையினர் சிரமப்பட வேண்டியுள்ளதால், அதற்கு மாற்றாக இ-சலான் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

வாகனங்களை நிறுத்தும் முயற்சியில் கடந்த காலங்களில் காவல் துறையினர் பலர் காயமடைந்துள்ளனர். சில சமயங்களில் காவல் துறையினர் நிறுத்துமாறு கூறியும், வாகன ஓட்டிகள் நிறுத்தாமல் சென்ற நிகழ்வுகளும் நடந்துள்ளன. காவல் துறையினர் மீது கார்கள் மோதிய சம்பவங்கள் நடந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்ப்பதற்காக, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க, தற்போது அதிநவீன தொழில்நுட்பங்களை காவல் துறையினர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications