கடவுள் நேரில் வர மாட்டார் இதுபோல ஆட்களை தான் அனுப்பி வைப்பார்! கார் சீட்பெல்ட்டை இந்த தம்பதி மறக்கவே மாட்டாங்க
கார்களில் ஏர்பேக் (Airbag) வந்த பிறகு விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதனாலேயே கார்களில் குறைந்தப்பட்சம் 6 ஏர்பேக்குகளை ஆவது வழங்குமாறு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஏர்பேக்குக்கு முன்பே பயணிகளின் பாதுகாப்புக்காக காரில் வழங்கப்பட்டுவரும் சீட்பெல்ட் (Seatbelt)-ஐ நம்மில் நிறைய பேர் முறையாக பயன்படுத்துவது இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.
கார்களில் சீட்பெல்ட் அணிவதை கட்டாயமாக்கி, பயணத்தின் போது அணியாவதவர்கள் மீது அபராத நடவடிக்கைகளை போலீசார் எடுத்தாலும், ஒருபக்கம் சீல்பெல்ட்டை நிராகரிப்பவர்கள் தொடர்ந்து நிராகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஒருசிலர், வேறு கவனத்தினால் சீல்பெல்ட் அணிவதை மறந்துவிடுகின்றனர். ஆனால், காரில் சீட்பெல்ட் ஆனது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

ஏனெனில், பிரேக் அடிக்கும்போது கார் மட்டும்தான் அதே இடத்தில் நிற்குமே தவிர்த்து, உள்ளே இருக்கும் பயணிகள் முன்னோக்கி நகர்வதை பார்க்க முடியும். அதுவே, சடர்ன் பிரேக் கொடுக்கப்பட்டால், காருக்குள் இருக்கும் பயணிகள் முன்னால் இருக்கும் பொருட்கள் மீது வேகமாக இடித்துக் கொண்டு காயமடைவதை பரவலாக நிறைய நேரங்களில் பார்த்து இருப்பீர்கள்.
சடர்ன் பிரேக்கிற்கே இப்படி என்றால், விபத்து நேரங்களில் எவ்வாறான காயங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். சீட்பெல்ட் அணிந்திருக்கவில்லை எனில், உண்டியல் குலுக்கப்படுவது போல் விபத்தின்போது காருக்குள் தாறுமாறாக குலுக்கப்படுவீர்கள். கார் வெளியில் அடைந்திருக்கும் சேதாரங்களை விட உங்களுக்கு அதிக காயங்கள் ஏற்பட்டிருக்கும்.

பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் முன் இருக்கையை நோக்கியும், முன் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டும் தூக்கி எறியப்படுவர். இத்தனை அசம்பாவிதங்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதினாலேயே சீட்பெல்ட் அணிவதை கார் ஓட்டிகள் மத்தியில் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், போலீஸ்காரர் ஒருவர் அறிவுறுத்தியதால் சீட்பெல்ட் அணிந்த தம்பதி இருவர் அதன்பின் நடந்த கோர விபத்தில் இருந்து எந்தவொரு காயமும் இன்றி உயிர் தப்பி உள்ளனர்.
கடந்த ஜூலை 26ஆம் தேதி மும்பையின் பந்த்ரா குர்லா காம்பிளக்ஸ் பகுதியில் கொட்டு மழையையும் பொருட்படுத்தாமல் தனது சேவையை வழங்கிக் கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டேபிள் பிரவீன் கேசிர்சாகர், அந்த வழியாக காரில் சென்றுக் கொண்டிருந்த தம்பதியை இடைமறித்து நிறுத்தினார். அப்போது, பெண் பயணி சீட்பெல்ட் அணியாமல் இருந்ததை கவனித்த கான்ஸ்டேபிள் பிரவீன் கேசிர்சாகர், கொஞ்சமும் கோபம் அடையாமல் அமைதியான குரலில் சீட்பெல்ட் அணியுங்கள் என்றும், சீட்பெல்ட்கள் பலரது உயிரை காப்பாற்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

போலீஸ்காரர் இவ்வளவு அக்கறையுடன், பொறுமையாக கூறுகிறாரே என தம்பதி இருவரும் சீல்பெல்ட் அணிந்து தங்களது பயணத்தை தொடர்ந்துள்ளனர். போலீஸ்காரர் கூறி 15 நிமிடங்களில் இந்த தம்பதியினரின் கார் அந்தேரி மேம்பாலத்தின் மீது பெரிய விபத்தில் சிக்கியுள்ளது. ஆனால், இருவரும் சீட்பெல்ட் அணிந்திருந்ததால், நல்லவேளையாக இருவருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சம்பவத்தில் சீல்பெல்ட் தான் தம்பதியின் உயிரை காப்பாற்றி உள்ளது என்றாலும், சரியான நேரத்தில் கடவுள் போல் குறுக்கே வந்து போதனையை வழங்கியதால் இந்த தம்பதியினர் இருவரும் தற்போது உயிரோடு இருக்கின்றனர். போலீஸ்காரர்கள் சாலையில் மடக்குகிறார்கள் என்றால் அது அபராதம் விதிக்க மட்டுமே என நினைப்பது தவறு என்பதற்கும், அரசாங்கம் கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்தும் மக்களை பாதுகாப்பதற்கே என்பதற்கும் இந்த நிகழ்வு சரியான உதாரணம் ஆகும்.
Source: Gautam Vijay Rohra on X


Click it and Unblock the Notifications









