எல்லா இடத்துலயும் நின்னு பிடிக்க போறாங்க... வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு போலீஸ் செக்... நாளை முதல் அதிரடி!
போக்குவரத்து போலீசார் நாளை முதல் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களால், ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. எனவே அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மும்பை போக்குவரத்து போலீசார் தற்போது போக்குவரத்து விதிகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராங்-சைடில் பயணம் செய்பவர்கள் உள்பட போக்குவரத்து விதிமுறைகளை மீறும் அனைவர் மீதும் மும்பை போக்குவரத்து போலீசார் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நாளையில் (ஜூன் 9) இருந்து மற்றொரு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக மும்பை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

மும்பை போக்குவரத்து போலீசாரின் அறிவிப்பின்படி, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லாவிட்டால் நாளை முதல் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மோட்டார் வாகன சட்டத்தின்படி, இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.

பாதுகாப்பை மனதில் வைத்துதான் இந்த விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பலர் இந்த விதிமுறையை பின்பற்றுவதில்லை. எனவே மும்பை நகரில் நாளை முதல் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றாலும் வழக்கம் போல நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மும்பை போக்குவரத்து போலீசார் அதிரடியாக அறிவித்துள்ளனர். ஹெல்மெட் விதிமுறையை மீறுபவர்களை பிடிப்பதற்காக மும்பை நகரின் பல்வேறு இடங்களில் நாளையில் இருந்து சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்படவுள்ளது.

இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என மும்பை போக்குவரத்து போலீசார் சமீபத்தில் அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளது. இனி இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் இந்த விதிமுறையை மீறினால், கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்து) ரக்திலக் ரோஷன் கூறுகையில், '' நாளை முதல், இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால், போலீசாரின் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியிருக்கும். இதன்படி இந்த விதிமுறையை மீறுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும்.

அத்துடன் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ஹெல்மெட் விதிமுறையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, அனைத்து போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார். முன்னதாக ஹெல்மெட் தொடர்பான விதிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டேவும் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலை பாதுகாப்பு விதிமுறைகளின் ஒரு பகுதியாக ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை மும்பை போக்குவரத்து போலீசார் அனைவருக்கும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் ஹெல்மெட் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தொடர்ந்து அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் மும்பை போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக சென்னையில் தற்போது ஹெல்மெட் தொடர்பான விதிமுறைகளை போக்குவரத்து போலீசார் மிக தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையிலும் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது சமீபத்தில் கட்டாயமாக்கப்பட்டது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








