சாலை விழிப்புணர்விற்காக சிக்னலாக மாறிய ஒன் பிளஸ் 7டி செல்போன்: வைரல் புகைப்படம்!
வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புதிதாக அறிமுகமாகியுள்ள ஒன் பிளஸ் 7டி செல்போன் கேமிராவைப் போலீஸார் பயன்படுத்தியுள்ளனர். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

தற்போதைய நவீன யுகத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவாறு போலீஸாரும் தங்களை அப்டேட் செய்து வருகின்றனர். அந்தவகையில், குற்றச் சம்பவங்களை கண்டுபிடிப்பதற்கும், அவற்றைத் தடுப்பதற்கும் தொழில்நுட்பங்களை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

அந்தவகையில், தற்போதைய இளைஞர்களைக் கவரும் வகையில் புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் மூன்று கேமிராக்கள் கொண்ட ஒன் பிளஸ் 7டி செல்போனைப் பயன்படுத்தி போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

21ம் நூற்றாண்டின் இளைஞர்கள் அனைவரும் இன்டர்நெட் வாசிகளாகவே இருப்பதை உணர்ந்த காவல் துறையினர், தங்களின் பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை சமூக வலைதளங்களைப் பயன்படுத்தியே செய்து வருகின்றனர்.
அந்தவகையில், தற்போது மேற்கொண்டிருக்கும் போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களைப் பயன்படுத்தியே அவர்கள் செய்து வருகின்றனர்.

இத்தகைய சிறப்பான நடவடிக்கையைதான் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகர போலீஸார் தற்போது மேற்கொண்டுள்ளனர். இதன்படி, புதிதாக அறிமுகமாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ஒன் பிளஸ் 7டி ஸ்மார்ட் போனின் மூன்று கேமிராக்களை கிராஃபிக் செய்து அதில், சமிக்ஞை மின் விளக்குகள் பொருத்தியிருப்பது போன்ற புகைப்படத்தை தயார் செய்துள்ளனர்.

மேலும், சாலையில் பயணிக்கும் ஒவ்வொருவரும், இதன்மீது எப்போதும் உங்களது கவனத்தை செலுத்துங்கள் என தெரிவித்துள்ளனர்.
டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த பதிவு தற்போது பலரால் ஷேர் மற்றும் லைக் செய்யப்பட்டு வைரலாகி வருகின்றது.

இதற்கு முன்பாகவும் இதேபோன்று பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்ற வகையிலான புகைப்படங்களை மும்பை நகர போலீஸார் டுவிட்டரில் பதிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அந்தவகையில், இணையத்தில் வைரலான மீம்களையும் அவர்கள் விட்டுவைத்ததில்லை. ஏன், ஐயர்ன் மேன் தலைக் கவசத்தைக் கூட அவர்கள் விட்டிவைக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
தொடர்ந்து, இணையத்தில் வைரலாகும் விஷயங்கள் மட்டுமின்றி, சொந்தமாக கிராஃபிக் வீடியோக்களையும் தயார்செய்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று, தமிழக போலீஸார்கூட அண்மையில் காட்டு தீயாய் வைரலாகிய ப்ரே ஃபார் நேசமணி (#Pray_for_Neasamani) என்ற ட்ரெண்டிங் ஹேஸ்டேக்கை பயன்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

நேசமணி தலை கவசம் அணிந்திருந்தால், அவருக்கு இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என தெரிவித்திருந்த தமிழக போலீஸார், அதற்கான புகைப்படத்தையும் டுவிட்டரில் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். அதனை, நீங்கள் கீழே காணலாம்.

இதைத்தொடர்ந்து, இதுபோன்ற வைரலான விஷயங்களைப் போலீஸார் பயன்படுத்திக் கொண்டு, விழிப்புணர்வு செய்வதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். மேலும், சமூக வலைதளம் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்வதன்மூலம் ஏனைய இளைஞர்களை விரைவில் சென்றடைய முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications








