12 வாகனங்கள் மோதிக் கொண்டதற்கு இந்த சின்ன தப்புதான் காரணமா! படிச்சு படிச்சு சொன்னாலும் யாரும் கேட்கிறது இல்ல!
மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து எப்படி நடந்தது? இதை எப்படித் தவிர்க்க முடியும்? விரிவாகக் காணலாம் வாருங்கள்.
மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலை, இந்தியாவின் பிஸியான சாலைகளில் ஒன்று, இங்கு ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றனர். அதிகமான வாகனங்கள் செல்லுவதால் இங்குப் போக்குவரத்து நெருக்கடியும் அவ்வப்போது ஏற்படும். அதே நேரம் எக்ஸ்பிரஸ் சாலை என்பதால் சாலைகளில் வாகனங்களின் வேகமும் அதிகமாக இருக்கும். இதனால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படும்.

இப்படியாக நேற்று மதியம் இந்த சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 12 வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கி சேதமாகியுள்ளது. இந்த விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலை ரைகாடு மாவட்டத்தில் நடந்தது. இங்குள்ள கோபாலி எக்ஸிட் பகுதிக்கு அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது ஒரு குன்று உள்ள பகுதியாகும். மலைப் பகுதியில் பாதை அமைத்து இந்த இடத்தில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள இறக்கமான பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ, போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதில் ஒரு லாரி வந்து மற்ற வாகனங்களில் மீது இடித்திருப்பது போலத் தெரிகிறது. சம்பவ இடத்தில் வாகனங்கள் அடிப்பட்ட விதத்தை வைத்துப் பார்க்கும் போது அந்த வாகனம் இறக்கத்தில் வரும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற வாகனங்கள் மீது மோதியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. உண்மையான காரணம் விசாரணைக்குப் பிறகு தான் தெரியவரும் என்றாலும், இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது.
பலர் வாகனங்களில் செல்லும்போது இறக்கமான பகுதி என்பதால் வாகனத்தின் எரிபொருளை மிச்சம் செய்ய வாகனத்தை ஆஃப் செய்துவிட்டோ அல்லது நியூட்டரிலில் போட்டு விட்டோ பயணிக்கிறார்கள். இது முற்றிலும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு செயலாகும். இப்படியாகப் பயணிப்பதால் வாகனம் விபத்தில் சிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாக ஒரு வாகனம் கியரில் இருக்கும் போது அந்த வாகனத்தின் டயர் கியர் பாக்ஸ் கண்ட்ரோலில் இருக்கும். இதனால் இன்ஜிலிருந்து அவுட்புட் வந்தால் மட்டுமே வாகனத்தின் வீலுக்கு பவர் கிடைக்கும். இதனால் வாகனம் முழுவதுமாக டிரைவரின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் வாகனம் நியூட்டலில் இருந்தாலோ அல்லது ஆஃப் செய்யப்பட்டிருந்தாலோ வாகனத்தின் கியர் பாக்ஸ் கணட்ரோலில் வீல்கள் இருக்காது.
வாகனத்தின் மொத்த எடையும் வீல்களுக்கு செல்லும் வீல்கள் இழுவை காரணமாக வேகமாக நகரத் துவங்கிவிடும். முன்னர் கியர் பாக்ஸ் நடுவில் வேகமாக நகர்வதைத் தடுப்பதால் வாகனத்தின் கண்ட்ரோல் இருக்கும். ஆனால் இப்பொழுது வாகனத்தின் கண்ட்ரோல் டிரைவரிடம் இருக்காது. அவர் இந்த வாகனத்தின் வேகத்தை பிரேக்கில் மட்டும் தான் கட்டுப்படுத்த முடியும்.
இப்படியாக வாகனம் வேகமாகச் செல்லும் போது பிரேக் பிடிக்க முயற்சித்தால் பிரேக் பிடிக்கும் போது வாகனத்தின் லோடு முழுவதும் பிரேக்கே தாங்க வேண்டிய நிலை இருக்கும். அதுவும் வாகனம் இறக்கத்தில் அதிக இழுவை பவரில் இருப்பதால் அதிகமான லோடு பிரேக்கிற்கு செல்லும் இதனால் பிரேக் சிஸ்டம் ஏதாவது ஒரு இடத்தில் கட்டாக வாய்ப்பு இருக்கிறது.
அப்படி பிரேக் கட்டாகிவிட்டால் அவ்வளவு தான் வாகனத்தை வேறு எதுவாலும் கட்டுப்படுத்த முடியாது. வாகனம் விபத்தில் சிக்குவதைத் தவிர வேறு வழியில்லை. குறிப்பிட்ட இந்த விபத்தைப் பார்க்கும்போது இப்படியான காரணத்தால் தான் வாகனம் விபத்தில் சிக்கியிருக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஒரு வேலை வாகனம் கியரில் இருந்தால் லோடு பாதி கியருக்கு சென்று பிரேக்கிற்கு லோடு குறைவாக வந்து பிரேக் கட் ஆகாமல் வாகனம் கட்டுப்பாட்டிற்கு வந்திருக்கும்.
இதனால் நீங்கள் வாகனத்தில் செல்லும் போது இறக்கமான பகுதியில் சென்றால் வாகனத்தை ஆஃப் அல்லது நியூட்டரலில் போட்டுப் பயணிக்கலாம் என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனத்தில் பலர் எரிபொருளை சிக்கனப்படுத்த வேண்டும் என இப்படி இறக்கத்தில் வாகனத்தின் இன்ஜினை ஆஃப் செய்தும், நியூட்டரலில்போட்டும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அதிகமான விபத்துக்கள் நடக்கிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகாவது மக்கள் இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









