ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்... மும்பையை காப்பாற்ற களத்தில் இறங்கிய பஸ்கள்... எப்படினு தெரியுமா?
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மும்பை நகரில் பஸ்கள் உயிர் காக்கும் பணியில் களமிறங்கியுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது உலகையே கதிகலங்க வைத்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கோவிட்-19 வைரஸ், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை கடுமையாக தாக்கியுள்ளது. கோவிட்-19 வைரஸை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்காக வரும் மே 3ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்திலும், கோவிட்-19 வைரஸால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக மஹாராஷ்டிர மாநில தலைநகரும், இந்தியாவின் வர்த்தக தலைநகருமான மும்பை கோவிட்-19 வைரஸ் பரவலின் ஹாட்-ஸ்பாட்டாக மாறியுள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி நிலவரப்படி, மும்பை நகரில் 4,200க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் கோவிட்-19 தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது.

தற்போதைய நிலையில் மும்பை நகரில், 108 சேவையின் கீழ் 93 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இதில், கோவிட்-19 நோயாளிகளுக்கான சேவையில் 66 ஆம்புலன்ஸ்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இவை ஒரு நாளுக்கு சராசரியாக 400-500 நோயாளிகளை ஏற்றி சென்று வருகின்றன. எனினும் பாதிப்பு அதிகரித்து வருவதால், ஆம்புலன்ஸ்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன.

இதனால் பெஸ்ட் நிறுவனம் பஸ்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றும் பணிகளை தொடங்கியுள்ளது. பெஸ்ட் (Brihanmumbai Electric Supply and Transport - BEST) நிறுவனம், தனது ஏழு ஏசி மினி பஸ்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றியுள்ளது. ஆம்புலன்ஸ்களின் தேவையை கருத்தில் கொண்டு, பெஸ்ட் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பவர்களையும், லேசான தொற்று இருப்பவர்களையும், கோவிட்-19 சிகிச்சை மையங்களுக்கு அழைத்து செல்ல, இந்த செமி-ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும் என பெஸ்ட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதற்கென இருக்கைகள் நீக்கப்பட்டு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து பெஸ்ட் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இன்னும் இதுபோல் 20 வாகனங்கள் எங்களிடம் கேட்கப்பட்டுள்ளன. பெஸ்ட் ஊழியர்கள் தினமும் மூன்று பஸ்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றம் செய்து வருகின்றனர். எனவே எங்களிடம் கேட்கப்பட்ட 20 ஆம்புலன்ஸ்களும் அடுத்த வாரத்திற்குள் தயார் செய்யப்பட்டு விடும்'' என்றார்.

பெஸ்ட் நிறுவனத்தால் ஆம்புலன்ஸ்களாக மாற்றம் செய்யப்பட்ட சில பஸ்கள் ஏற்கனவே சேவைக்கு வந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பெஸ்ட் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால், கோவிட்-19 வைரஸ் பிரச்னையை கையாள்வதற்கு என்று பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் அழுத்தம் குறையும்.

இதுகுறித்து பெஸ்ட் அதிகாரிகள் கூறுகையில், ''கோவிட்-19 வைரஸை எதிர்த்து மும்பை மாநகரம் போரிட்டு வருகிறது. இதில், பெஸ்ட் நிறுவனமும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. ஏசி வசதி செய்யப்பட்ட 70 மினி பஸ்கள் மூலமாக, 79 சமுதாய சமையல் கூடங்களில் இருந்து, தினமும் சுமார் 2.50 லட்சம் உணவு பொட்டலங்களை நாங்கள் ஏற்றி சென்று வருகிறோம்'' என்றனர்.

மும்பை நகரில் பாதிப்பு கடுமையாக உள்ளதால், வரும் மே 3ம் தேதிக்கு அப்பாலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன்படி வரும் ஜூன் மாதம் வரை அங்கு லாக்டவுன் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை அரசிடம் இருந்து வரவில்லை.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








