ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்
மாறுவேடத்தில் சென்று ஆட்டோ டிரைவர்களை களையெடுக்கும் அதிகாரிகளின் வேட்டை தீவிரமடைந்துள்ளது. இதனால் மக்கள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பொதுமக்கள் தங்கள் போக்குவரத்திற்கு அதிகம் பயன்படுத்தும் வாகனங்களில் ஒன்று ஆட்டோ. ஓலா, உபேர் போன்ற 'கேப்' நிறுவனங்களின் ஆதிக்கம் தற்போது அதிகரிக்க தொடங்கி விட்டாலும், ஆட்டோக்களை நம்பி வாழும் பலர் இருக்கவே செய்கின்றனர். ஆனால் ஆட்டோ டிரைவர்களின் அடாவடிகளுக்கு ஒரு முடிவே இல்லாமல் போய் கொண்டுள்ளது.

ஆட்டோ டிரைவர்களில் பெரும்பாலானோர் மீட்டர் பொருத்துவது கிடையாது. அதற்கு பதிலாக பயணிகளிடம் கட்டண கொள்ளையை அவர்கள் அரங்கேற்றுகின்றனர். இதனால் ஆட்டோவில் சவாரி செய்யும் பயணிகள் மிக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுதவிர ஆட்டோ டிரைவர்கள் மீது மற்றொரு புகார் மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

குறிப்பிட்ட இடங்களுக்கு வர ஆட்டோ டிரைவர்கள் பயணிகளிடம் மறுப்பு தெரிவிப்பார்கள். இந்த மோசமான அனுபவம் உங்களில் பலருக்கும் கிடைத்திருக்கலாம். விதிமுறைப்படி இது தவறு. தமிழ் நாடு மட்டுமல்லாது இந்தியா முழுக்க இந்த பிரச்னை நிலவி வருகிறது. எனவே குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு செல்ல மறுக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது அதிகாரிகள் அவ்வப்போது கடும் நடவடிக்கையை எடுக்கின்றனர்.

ஆனால் பிரச்னை முடிவுக்கு வந்தபாடில்லை. மீண்டும் மீண்டும் தொடரவே செய்கிறது. எனவே குறிப்பிட்ட பகுதிகளுக்கு வர மறுக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது மும்பை மாநகரில் தற்போது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம், இந்த புகாருக்கு உள்ளான சுமார் 1,000 ஆட்டோ டிரைவர்களின் டிரைவிங் லைசென்ஸ் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 6 மாத கால அளவில், குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்ல மறுத்த 918 ஆட்டோரிக்ஸா டிரைவர்களின் லைசென்ஸை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் அதிரடியாக ரத்து செய்துள்ளனர். ஆட்டோ டிரைவர்கள் பல்வேறு காரணங்களால், குறிப்பிட்ட இடங்களுக்கு வர மறுக்கின்றனர். அத்தகைய டிரைவர்களின் லைசென்ஸ்தான் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் அவர்களின் அப்பீலை நீதிமன்றம் அதிரடியாக நிராகரித்து விட்டது. டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட டிரைவர்கள் இனி மஹாராஷ்டிரா மாநிலத்தின் எந்த பகுதியிலும் ஆட்டோக்களை இயக்க முடியாது.

விதிமுறைகளை மீறும் ஆட்டோ டிரைவர்களுக்கு எதிரான அதிரடி ஆபரேஷன் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. மாநில போக்குவரத்து கமிஷனர் சேகர் சென்னே தலைமையில், இந்த அதிரடி ஆபரேஷன் தொடங்கியது. அப்போது முதல் பல்வேறு விதிமீறல்களுக்காக ஒட்டுமொத்தமாக 12,342 ஆட்டோரிக்ஸா டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல மறுத்த காரணத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்ட ஆட்டோரிக்ஸா டிரைவர்களின் எண்ணிக்கை மட்டும் 918. அவர்களின் டிரைவிங் லைசென்ஸ்தான் அதிரடியாக ரத்தும் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஒரே நேரத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி சென்ற குற்றத்திற்காக 5,500க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆட்டோக்களில் டிரைவர் உள்பட ஒட்டுமொத்தமாக 4 பேர் (1 டிரைவர் + 3 பயணிகள்) மட்டுமே பயணிக்க வேண்டும் என வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதை மீறி மூன்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவர்களும் சிக்கியுள்ளனர். அதே சமயம் பேட்ஜ் (அ) டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் இருந்த 6,257 ஆட்டோ டிரைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறும் ஆட்டோ டிரைவர்களை கண்டறிவதற்காக 14 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் இருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டே இருந்ததன் காரணமாகவே இந்த சிறப்பு படைகள் அமைக்கப்பட்டன. சிறப்பு படைகளை சேர்ந்த அதிகாரிகள், பயணிகளை போல் மாறுவேடத்தில் சென்று ஆட்டோ டிரைவர்களை கையும், களவுமாக பிடித்துள்ளனர்.

ஆனால் இது மிக கடுமையான நடவடிக்கை என ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 918 பேரின் டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்து விட்டதால், அவர்களது குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தங்களை நிரூபிக்க அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதே சமயம் அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுகுறித்து மும்பை மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் மீதும் கூட இதுபோன்ற ஏராளமான புகார்கள் உள்ளன. அவர்களை களையெடுக்க தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகளும்,போலீசாரும் முன் வருவார்களா? என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications








