தேவையில்லாமல் ஹாரன் அடிக்கும் கெட்ட பழக்கத்தை ஒழிக்க செம ப்ளான்... உலகை அசத்திய இந்திய போலீஸ்
தேவையில்லாமல் ஹாரன் அடிக்கும் கெட்ட பழக்கத்தை ஒழிக்க, இந்திய போலீசார் கொண்டு வந்துள்ள திட்டம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வாகன ஓட்டிகள் பெரும்பாலானோரிடம் ஒரு மோசமான பழக்கம் இருக்கிறது. தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பதுதான் அது. எதற்கு ஹாரன் அடிக்கிறோம் என்பதே தெரியாமல், மற்ற வாகன ஓட்டிகளின் காது சவ்வு கிழியும் அளவிற்கு இங்கு பலர் ஹாரன் அடித்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக ஒலி மாசுபாடு உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இந்தியர்களிடம் இருக்கும் இந்த மோசமான பழக்கத்தை ஒரு சில வெளிநாடுகளில் கிண்டல் அடிக்கும் நிலை காணப்படுகிறது. ஆனால் இந்தியர்கள் திருந்துவதாக இல்லை. தேவையில்லாத நேரங்களில் ஹாரனை அடித்து கொண்டேதான் இருக்கின்றனர். சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும் நேரங்களில் கூட ஹாரன் அடிக்கின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

ஹாரன் அடிப்பதால் சிக்னல் உடனடியாக பச்சை விளக்கிற்கு மாறி விடுமா? என்பது தெரியவில்லை! ஆனால் பழக்க தோஷத்தில் ஒரு சிலர் ஹாரன் அடித்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பவர்களுக்கு எதிராக தற்போது வரை கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

எனவே இது தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை. தேவையில்லாமல் ஹாரன் அடிக்கும் வாகன ஓட்டிகளை அதிகளவு கொண்டிருக்கும் நகரமாக மும்பை உள்ளது. மும்பையை உலகின் Honking தலைநகரம் என்று சொன்னால் கூட மிகையல்ல. அந்த அளவிற்கு இந்த பிரச்னையால் மும்பை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள 34 போக்குவரத்து டிவிஷன்களின் 6 பிரிவுகளிடம் இருந்து கடந்த ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று பெறப்பட்டது. அதாவது தேவையில்லாமல் ஹாரன் அடித்ததற்காக கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 1,293 பேர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடவடிக்கை எதுவும் பெரிதாக எடுக்கப்படுவதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.

ஆனால் மும்பை போக்குவரத்து போலீசார் தற்போது விழித்து கொண்டுள்ளனர். தேவையில்லாமல் ஹாரன் அடிப்பதை தடுப்பதற்காக மிகவும் வித்தியாசமான திட்டம் ஒன்றை அவர்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். மும்பை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள டிராபிக் சிக்னல்களில் தேவை இல்லாமல் ஹாரன் அடிப்பதை தடுப்பதற்காக புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

‘The Punishing Signal' என பெயரிடப்பட்டுள்ள இந்த புது திட்டத்தை மும்பை போக்குவரத்து போலீசார் கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிமுகம் செய்தனர். இதன்படி சிஎஸ்எம்டி, மரைன் டிரைவ், பெடார் சாலை, மற்றும் பந்த்ரா உள்ளிட்ட இடங்களில் உள்ள டிராபிக் சிக்னல்களுடன் டெசிபல் மீட்டர்கள் கனெக்ட் செய்யப்பட்டுள்ளன.

ஒரு வேளை வாகன ஓட்டிகள் தொடர்ச்சியாக ஹாரன் அடிப்பதன் காரணமாக, டெசிபல் லெவல் 85 dB-க்கு மேல் சென்று விட்டால், சிக்னல் ரீ-செட் ஆகி விடும். அத்துடன் மேலும் கொஞ்ச நேரத்திற்கு சிகப்பு விளக்கே எரிந்து கொண்டிருக்கும். அதாவது சிக்னலில் சிகப்பு விளக்கு மாறுவதற்கு 2 வினாடிகள் இருக்கிறது என வைத்து கொள்ளுங்கள்.

அப்போது டெசிபல் லெவல் 85 dB-ஐ கடந்து விட்டால், சிக்னல் மீண்டும் ரீ-செட் ஆகிவிடும். மேலும் தொடர்ந்து சிகப்பு விளக்கே எரிந்து கொண்டிருக்கும். எனவே வாகன ஓட்டிகள் இன்னும் கொஞ்ச நேரம் கூடுதலாக காத்து கொண்டிருக்க வேண்டும். மும்பை போலீசாரின் இந்த புதிய அதிரடி திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் விமர்சனங்களும் எழாமல் இல்லை.

ஏனெனில் இந்த திட்டத்தால் நடைமுறையில் சில சிக்கல்கள் எழுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்த திட்டம் தொடர்பாக நெட்டிசன்கள் சிலர் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். ஒருவேளை ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனம் போன்றவற்றின் சைரன் ஒலி டெசிபல் மீட்டரில் பதிவானால், சிக்னலில் சிகப்பு விளக்கே எரிந்து கொண்டிருக்கும்.
அப்போது அவசர கால வாகனங்கள் செல்வதில் பாதிப்பு ஏற்படலாம். வித்தியாசமான திட்டத்தை கொண்டு வந்து பாராட்டுக்களை பெற்றுள்ள மும்பை போலீசாருக்கு, இதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும் உள்ளது. இந்த திட்டம் தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








