பைக்கை கிண்டல் செய்த இளைஞருக்கு அடி, உதை: இந்திய பைக் வீக் திருவிழாவில் களேபரம்!
இந்திய பைக் வீக் திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பைக்கை கிண்டல் செய்த இளைஞருக்கு அடி, உதை விழுந்தது.
இந்திய பைக் திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பைக் குறித்து ஃபேஸ்புக்கில் கிண்டல் செய்தவரை, பைக் உரிமையாளர்களின் நண்பர்கள் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 24 மற்றும் 25 தேதிகளில் கோவாவில் இந்திய பைக் வீக் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்த திருவிழாவில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களையும், பைக் உரிமையாளர்களும் பங்கேற்றனர்.

மும்பையை சேர்ந்தவர் பைக் ஆர்வலரான சவ்ரப் மாயேகர் என்பவரும் இந்த திருவிழாவிற்கு வந்திருந்தார். அங்கு ஒவ்வொரு அரங்கமாக சுற்றி பார்த்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் குறித்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் படங்களையும், பதிவுகளையும் போட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய பைக் வீக் திருவிழா அரங்கில் நிறுத்தப்பட்டிருந்த கவாஸாகி இசட்800 பைக்கை படம் பிடித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார். அத்துடன், அந்த பைக்கின் படத்தை போட்டு எஞ்சின் மற்றும் க்ளட்ச் பிளேட் ஆகியவறிற்கு RIP என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு போட்டுவிட்டு, அடுத்தடுத்த அரங்கங்களை அவர் சுற்றி பார்க்க சென்றிருக்கிறார். இதனிடையே, சவ்ரப் மாயேகர் போட்ட ஃபேஸ்புக் பதிவை, அந்த கவாஸாகி இசட்800 பைக்கின் உரிமையாளரின் நண்பர்கள் பார்த்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், ஃபேஸ்புக்கில் கிண்டலாக பதிவு போட்ட சவ்ரப் மாயேகரை இந்திய பைக் வீக் திருவிழா வளாகத்தில் தேடி இருக்கின்றனர். அப்போது அங்கிருந்த மற்றொரு அரங்கில் நின்றிருந்த சவ்ரப் மாயேகரை பிடித்து, கிண்டல் செய்தது குறித்து கண்டித்ததுடன், அந்த பதிவை நீக்குமாறு கேட்டுள்ளனர்.
Recommended Video


அதற்கு மாயேகர் மறுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட கவாஸாகி இசட்800 பைக்கின் உரிமையாளரின் நண்பர்கள் கும்பலாக சூழ்ந்து கொண்டு அடித்து உதைத்துள்ளனர். மேலும், அவரை பிடித்து வந்து பைக்கின் அருகே அமர வைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.

அத்துடன், பைக்கை தொட்டு கும்பிட சொல்லியும், காலில் விழ வைத்தும் துன்புறுத்தி இருக்கின்றனர். இந்த சம்பவம் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, சவ்ரப் தாக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஃபேஸ்புக்கில் கவாஸாகி இசட்800 பைக்கின் உரிமையாளர் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சவ்ரப் அந்த பதிவை நீக்க சொல்லியும் கேட்காததால், அந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக சப்பை கட்டு கட்டி பதில் போட்டு வருகின்றனர்.

பைக்குகளுக்காக இந்தியாவில் கொண்டாடப்படும் பிரத்யேக திருவிழாவான இந்திய பைக் வீக் திருவிழாவில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது இந்திய பைக் வீக் திருவிழா நிர்வாகிகள் புகார் செய்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வலுப் பெற்றுள்ளது.
சவ்ரப் மாயேகர் தாக்கப்படும் வீடியோ காட்சிகளை மேலே காணலாம்.


Click it and Unblock the Notifications