லூனா 25 நிலவில் விழுந்ததால் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்! நாசா சொன்ன அதிர்ச்சி தகவல்!
ரஷ்யா நிலவுக்கு அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கிய இடத்தை நாசா கண்டுபிடித்துள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. லூனா 25 நிலவில் மோதியதால் அங்கு 10 மீட்டர் அளவிலான மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் விண்ணிற்கு அனுப்பியது சுமார் 40 நாட்கள் பயணத்திற்குப் பிறகு வெற்றிகரமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி சந்திரயான் 3 பத்திரமாக திட்டமிட்டபடி நிலவில் தரை இறங்கியது. தற்போது சந்திரயான் 3 நிலவில் பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சந்திரயான் 3 ஏவப்பட்ட பின்பு ரஷ்யா சுதாரித்துக் கொண்டு இந்தியாவுக்கு முன்பே ரஷ்யா நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக லூனா 25 விண்கலத்தை தயாரித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.
இந்த இரு விண்கலங்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தான் நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டதாக கூறப்பட்டது. இதில் எந்த விண்கலம் முதலில் தரையிறங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் ஏற்பட்டது. பலர் லூனா 25 தான் முதலில் தரை இறங்க வாய்ப்புள்ளதாக பேசினர். இதனால் விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய குழப்பமும் ஏற்பட்டது.

ஆனால் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி லூனா 25 விண்கலத்தில் பிரச்சினை ஏற்பட்டு அது கட்டுப்பாட்டை இழந்து நிலவில் சென்று மோதியது. இதனால் லூனா 25 திட்டம் தோல்வியில் முடிந்தது. இது குறித்து அறிவியல் விமர்சகர்கள் கூறும்போது ரஷ்யா இதற்கான போதிய ஆய்வுகளை செய்யாமல் விண்கலத்தை அனுப்பியது இதற்கான முக்கியமான காரணம் என்று கூறினர்.
இந்நிலையில் லூனா 25 உடனான தொடர்பை ரஷ்யா இழந்த பின்பு இந்த லூனா 25 நிலவில் எந்த பகுதியில் இருக்கிறது என மற்ற நாடுகள் எல்லாம் தேட துவங்கி விட்டன. மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்கள் பல நிலவை சுற்றி நிலவு குறித்து ஆய்வுகளை செய்து வருகிறது. அந்த செயற்கைக்கோள்கள் மூலம் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் நாசா அனுப்பிய எல்ஆர்ஓ என்ற சேட்டிலைட் நிலவை சுற்றி வருகிறது. இந்த சேட்டிலைட் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் நிலவில் புதிதாக பத்து மீட்டர் விட்டம் கொண்ட ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இந்த பள்ளம் வேறு எந்த விண்கற்கள் விழுந்தும் ஏற்படவில்லை என்பதும் புரிகிறது. இதனால் சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட லூனா 25 விண்கலம் மோதிய இடம் எதுவாக தான் இருக்கும் என நாசா தற்போது அறிவித்துள்ளது.
சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யா தனியாக பிரிந்த போது ரஷ்யா விண்வெளி ஆய்வில் அதிக கவனம் செலுத்தினாலும் நிலா குறித்த ஆய்வில் அமெரிக்கா நிலவில் ஒன்றும் இல்லை என கைவிட்ட பிறகு ரஷ்யாவும் அதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் இருந்தது.
இந்நிலையில் சந்திரயான் 1 விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதிக்கு சென்று அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆய்வுகளை செய்து முடிவுகளை வெளியிட்ட பின்பு பல நாடுகள் நிலவு குறித்து ஆய்வுகளை மீண்டும் துவங்கி விட்டன. இதனால்தான் சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு லூனா 25 விண்கலம் ரஷ்யா மூலமாக விண்ணிற்கு அனுப்பப்பட்டது.
ஆனால் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுததன் அதன் காரணமாக இங்கிலாந்து இந்த லூனா 25 திட்டத்திற்கு ரஷ்யாவிற்கு வழங்க விருந்த ஒரு முக்கியமான பாகம் ஒன்றை வழங்க மறுத்து விட்டது. இந்த பாகம் ஒரு கேமரா ரக பாகமாக இருக்கிறது. இந்த கேமரா மூலம் கிடைக்கும் தகவலை வைத்து தான் தரையிறங்குவது குறித்த முழுமையான டேட்டாக்களை விண்கலம் பெற முடியும் என்பதால் இந்த கேமராவை ரஷ்யா இங்கிலாந்திடம் கேட்டிருந்தது.
முதலில் இந்த கேமராவை வழங்குவதாக தெரிவித்து இருந்த இங்கிலாந்து பின்னர் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததால் இந்த கேமராவை வழங்க மறுத்துவிட்டது. இந்நிலையில் இந்த கேமரா இல்லாமல் தரையிறக்க ரஷ்யா முடிவு செய்தது. ஆனால் இது தவறான முடிவு என அறிவியல் விமர்சகர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது ரஷ்யா அவசர அவசரமாக எடுத்த முடிவு தான் என அறிவியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யா தொடர்ந்து இந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து மீண்டும் தனது விண்கலத்தை நிலவில் தரையிறக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications









