வானத்தில் வட்டமடிக்க தயார்... நாசா உருவாக்கிய முழுமையாக மின்சாரத்தால் மட்டுமே இயங்கும் விமானம்!
நாசா உருவாக்கிய முழுமையாக மின்சாரத்தால் மட்டுமே இயங்கக் கூடிய எக்ஸ்-57 எனும் விமானம் வெகு விரைவில் பறக்க தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா உருவாக்கிய முழுமையாக மின்சாரத்தால் இயங்கக் கூடிய எக்ஸ்-57 விமானம் வெகு விரைவில் அதன் முதல் பறத்தலை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோதனை அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விமானம் மிகவும் குறைவான எடைக் கொண்டது என கூறப்படுகின்றது. மேலும், இது குறைவான மின்சாரத் திறனையே பயன்படுத்துமாம்.

இதுமட்டுமின்றி இதன் மின் மோட்டார்கள் மிக மிகக் குறைவான அளவிலேயே சத்தத்தை வெளிப்படுத்தும் என்றும் கூறப்படுகின்றது. இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் விமானத்தையே நாசா உருவாக்கியிருக்கின்றது. இதுவே விரைவில் அதன் முதல் டேக்-ஆஃப்பை லாஸ் ஏஞ்ஜல்ஸில் உள்ள கிழக்கு பாலைவன பகுதியில் மேற்கொள்ள இருக்கின்றது.

உலகமே மின் வாகன இயக்கத்தை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றது. ஸ்கூட்டர், பைக், ஆட்டோ, கார், பேருந்து மற்றும் கனரக வாகனம் என அனைத்து சாலை போக்குவரத்து வாகனங்களும் மின்சார வெர்ஷனில் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. ஏன், கப்பல்கள்கூட எலெக்ட்ரிக் வெர்ஷனில் பயன்பாட்டிற்கு வர தொடங்கியுள்ளன.

இதேபோல், விமானங்களையும் மின்சார வெர்ஷனுக்கு மாற்றும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே நாசாவின் எக்ஸ்-57 மின்சார விமானம் விரைவில் அதன் முதல் பறத்தலை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விமானம் விமானத்துறையில் ஓர் புரட்சியை ஏற்படுத்தும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எக்ஸ்-57 தற்போது மேக்ஸ்வெல் என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. நாசா இந்த விமானம் பற்றிய எந்த முக்கிய தகவல்களை வெளியிடவில்லை. விரைவில் அனைத்து தகவல்களையும் அது வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாசா சுமார் 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பட்ஜெட்டை சுற்றுச்சூழல் நலன் சார்ந்த பணிகளுக்காக ஒதுக்கி வைத்திருக்கின்றது.

இதில் சுமார் 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை மின்சார வாகனங்கள் சார்ந்து முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முதலீட்டின்கீழே புதிய மின்சார விமானம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி கப்பல் போன்றவற்றையும் அது தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காற்று மாசு மற்றும் புவி வெப்பமயமாதல் உள்ளிட்டவை அதிகரித்து வரும் சூழலில் இந்த மாதிரியான நடவடிக்கையில் நாசா களமிறங்கியிருக்கின்றது. சமீபத்திய ஆய்வின்படி, அமெரிக்காவில் கார்பன் வெளியேற்றம் மிக வளர்ந்து வருவது தெரிய வந்திருக்கின்றது. இதை அதிகரிக்கச் செய்பவற்றில் விமானங்களும் ஒன்றாம்.

1990 முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்தால் மட்டும் 17 சதவீதம் கார்பன் அதிகரித்துள்ளது. இதேபோல் உலக நாடுகள் பலவற்றில் விமானங்களால் கணிசமான அளவு கார்பனின் அளவு அதிகரித்துக் காணப்படுகின்றது. பேருந்து, ரயில் போல் விமான போக்குவரத்தும் பெருமளவில் அதிகரித்திருப்பதன் விளைவாக இம்மாதிரியான சூழல் உருவாகியிருக்கின்றது.

இதில் தீர்வு காணும் நோக்கிலேயே நாசா எக்ஸ்-57 உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள விமானங்களைவிட மிக சிறப்பாக செயல்படும். குறிப்பாக, கார்பன் வெளிப்பாடு இல்லாமல் மிக சிறந்த செயல்திறனை அது வெளியேற்றும். இந்த விமானத்தின் மோட்டார்கள் மற்றும் ப்ரொபல்லர்களை இயக்குவதற்காக ஆயிரக் கணக்கில் ரீ-சார்ஜபிள் லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய மின்சார விமானத்தை நாசா மட்டுமே உருவாக்கவில்லை. அது கலிஃபோர்னியாவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் பவர் சிஸ்டம்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்தே உருவாக்கியிருக்கின்றது. இதுவே, AAA பேட்டரிகளைப் போல் இலகு ரக ஆஃப்-தி-ஷெல்ஃப் லித்தியம் அயன் செல்களை விமானத்திற்காக உருவாக்கியது.
ஆனால், விமானத்தின் மோட்டார் மற்றும் இறக்கைகளை நாசாவே உருவாக்கியிருக்கின்றது. விமானத்தை டேக்-ஆஃப் செய்ய 12 உயர்-லிஃப் மோட்டார்கள் எக்ஸ்-57 இல் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன், இரு 60 கிலோவாட் திறன் கொண்ட பெரிய மோட்டார்களும் விமானத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து விமானத்தை மணிக்கு 138 மைல் வேகத்தில் பறக்க செய்கின்றன. இதன் முழு திறன் வெளிப்பாடே கூடிய விரைவில் சோதனைச் செய்யப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications