தேசிய நெடுஞ்சாலைகளில் இனி டோல் பூத் இருக்காது? 2027-க்குள் புதிய மாற்றம் – கட்கரி அறிவிப்பு
நாடுமுழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூல் முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது வாகனங்கள் சுங்கச் சாவடிகளை கடக்கும்போது ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தி வந்தாலும், பெரும்பாலான இடங்களில் வாகனங்கள் வேகத்தை குறைத்து குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் Multi-Lane Free Flow (MLFF) எனப்படும் தடையில்லா சுங்கக் கட்டண வசூல் முறையை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் 2027 மார்ச் மாதத்திற்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள சுங்கச் சாவடிகளில் இந்த முறையை கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

எப்படி செயல்படும்?
MLFF முறையில் தற்போதுள்ள சுங்கச் சாவடிகளில் இருக்கும் தடுப்புகள் அகற்றப்படும். வாகனங்கள் சுங்கக் கட்டண சாவடிகளில் நின்று அல்லது நீண்ட நேரம் காத்திருக்காமல் தொடர்ந்து பயணிக்க முடியும்.
இதற்காக ஃபாஸ்டேக் மற்றும் தானியங்கி முறையில் வாகனத்தின் பதிவு எண்ணை ஸ்கேன் செய்யும் Automatic Number Plate Recognition (ANPR) கேமராக்கள் இணைந்து செயல்படும். வாகனம் சுங்க வசூல் மையத்தை கடக்கும்போது அதன் நம்பர் பிளேட் கேமரா மூலம் அடையாளம் காணப்படும். அதே நேரத்தில் ஃபாஸ்டேக் மூலமாகவும் வாகனத்தை அடையாளம் கண்டு, உரிய கட்டணம் தானியங்கி வசூலிக்கப்படும்.
சோதனை முயற்சிகள் வெற்றி
மத்திய அரசின் இலக்குப்படி, டோல் பிளாசாவை கடக்கும் நேரத்தை 10 விநாடிகளுக்கும் குறைவாக கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயண நேரம் மட்டுமின்றி எரிபொருள் வீணாவதும் குறையும்.
இந்தியாவின் முதல் MLFF தடையில்லா டோல் வசூல் திட்டம் குஜராத்தில் உள்ள NH-48-ன் சூரத்-பரூச் பகுதியில் உள்ள கோராயாசி சுங்கச் சாவடியில் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் நாளிலேயே சுமார் 41,500 வாகனங்கள் இந்த முறையின் கீழ் சுங்கக் கட்டண வசூல் பகுதியை கடந்ததாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் MLFF விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் ராஜஸ்தானின் மனோகர்புரா சுங்கச் சாவடியிலும் இந்த வசதி செயல்படுத்தப்பட்டது.
தற்போதைய சுங்க கட்டண வசூல் நிலையங்கள் மூலமாக நடவடிக்கைகளுக்கான செலவு 12 முதல் 15 சதவீதமாக இருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுவே தானியங்கி வசூல் முறை அமல்படுத்தினால், இது 2 முதல் 4 சதவீதமாக குறையும் என்றும் ஆண்டுக்கு ரூ.6,000 கோடி முதல் 7,000 கோடி வரை செலவு மிச்சமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தடையில்லா பயணம்
தவிரவும், முந்தைய மதிப்பீட்டின்படி MLFF மூலம் ஆண்டுக்கு சுமார் 250 கோடி லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படுவதுடன், 81,000 டன் அளவிலான கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் வரிசையில் நிற்கும் நிலை முற்றிலுமாக குறைய வாய்ப்புள்ளது. ஃபாஸ்டேக் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு இது பயணத்தை மேலும் வேகமாகவும் தடையில்லாமலும் மாற்றக்கூடிய முக்கியமான மாற்றமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications


