300 டன் தங்கத்துடன் மாயமான நாஜி படையின் பேய் ரயில் கண்டுபிடிப்பு?
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த காலத்தில் 300 டன் தங்க கட்டிகளுடன் மாயமான நாஜி படைக்கு சொந்தமான ரயில் இருக்கும் இடத்தை ஆய்வு செய்வதற்கான முயற்சியில் புதையல் வேட்டைக் குழு ஒன்று மும்முரமாக களமிறங்கியிருக்கிறது.
சுரங்கத்தில் புதைந்து கிடப்பதாக கருதப்படும் அந்த ரயிலை கண்டுபிடித்து, அந்த ரயில் இருக்கும் தங்கப்புதையலை வெளியே எடுக்கும் ஆவலுடன் அந்த குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

ரஷ்யாவுக்கு பயந்து...
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வரும் தருவாயில், ரஷ்யாவுக்கு பயந்து தங்களிடம் இருந்த விலையுயர்ந்த துப்பாக்கிகள், விலை மதிப்புமிக்க வைரக்கற்கள், மற்றும் ஆயிரக்கணக்கான டன் தங்கத்தை ரயில்கள் மூலமாக ரகசிய இடங்களில் மறைத்து வைக்க நாஜி படையினர் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. 1945ம் ஆண்டு வாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மர்மம்...
இந்த நிலையில், அந்த ரயில்களில் ஒன்று போலந்து நாட்டு வழியாக ஒரு சுரங்கப்பாதையை கடந்தபோது மாயமானதாக கூறப்படுகிறது. மேலும், அந்த ரயில் அமானுஷ்ய சக்தியால் மாயமானதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறி, அந்த ரயிலை பேய் ரயில் என்றும் குறிப்பிடுகின்றனர்.

பயன்பாடு இல்லை...
அதன்பிறகு அந்த சுரங்கப்பாதை பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டது. மேலும், பேய் பயத்தால் அங்கு செல்வதை உள்ளூர் வாசிகளும் தவிர்த்தனர். ஆனால், ரயில் அங்குதான் மாயமானதா என்பதில் மர்மம் நீடித்து வருகிறது.

புதையல் வேட்டை
அந்த ரயில் பற்றிய தகவல்களில் மர்மம் நீடிக்கும் நிலையில், அந்த ரயில் எங்கு மாயமானது என்பதை கண்டறிய புதையல் வேட்டைக் குழுவினர் தீவிர முயற்சிகளில் இறங்கினர். அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அந்த ரயில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக புதையல் வேட்டைக் குழுவினர் பரபரப்பை கிளப்பினர்.

வதந்தி
ஆனால், அவை வதந்தியாக பார்க்கப்பட்டது. இந்த விவகாரம் பற்றி அப்பகுதியின் மாகாண அரசு சார்பில் விசாரணையும் நடத்தப்பட்டது. அதில், உருப்படியான விஷயம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், அந்த விஷயம் அப்படியே அமுங்கிப்போனது.

மீண்டும் பரபரப்பு
மாயமானதாக கருதப்படும் இடத்தை நவீன கருவிகள் உதவியுடன் ஆய்வு செய்ததில் மண்ணுக்கு அடியில் ரயில் புதைந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக புதையல் வேட்டைக் குழுவினர் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளனர். அரசு சார்பில் முயற்சிகள் இல்லாத நிலையில், புதையல் வேட்டைக் குழுவினரும், தன்னார்வ குழுவினரை சேர்ந்த 35 பேர் இணைந்து இந்த முயற்சியில் இறங்கியிருக்கின்றனர்.

மும்முரம்...
இந்த வாரத்தில் ரயில் புதைந்து கிடப்பதாக கருதப்படும் இடத்தை ராட்சத எந்திரங்கள் கொண்டு அகழ்ந்தெடுத்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். 495 அடி நீளமுடைய அந்த ரயில் இருக்கும் இடத்தை 100 மீட்டர் நீளத்திற்கும், 9 மீட்டர் ஆழத்திலும் அகழ்ந்தெடுத்து அந்த ரயிலை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஒருவேளை....
ஒருவேளை தங்கப்புதையல் ரயில் கண்டுபிடிக்கப்பட்டால், 10 சதவீதத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று இந்த விஷயத்தில் முன்னிலை வகித்து நடத்தி வரும் இரண்டு பேர் கோரிக்கை வைத்துள்ளனர். அதேநேரத்தில், இது ஜெர்மனி ராணுவத்திற்கு சொந்தமானது என்று ஒரு சாராரும், இது போலந்து நாட்டு மக்களுக்குடையது என்று ஒரு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications