கோவிட்-19 சிகிச்சை அறையாக மாறிய ரயில் பெட்டிகள்... எத்தனை ஆயிரம் படுக்கைகள் தயாராக இருக்கு தெரியுமா?..
கோவிட் 19 சிகிச்சை வார்டாக பல ஆயிரக் கணக்கான ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து ரயில்வேத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தகவலைக் கீழே காணலாம்.

கோவிட்-19 வைரஸ் பரவலின் இரண்டாம் அலை பாதிப்புகள் நாட்டையே உலுக்கி எடுத்து வருகின்றது. முன்பெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் தொற்றும், இறப்புகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. நோயாளிகள் பலர் சிகிச்சை பலனின்றி, குறிப்பாக, போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து, பல்வேறு மருத்துவமனைகளில் போதிய படுக்கையறை வசதி இல்லாததும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தம் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, நாட்டின் தலைநகரான டெல்லியில் ஒரே படுக்கையில் இரு நோயாளிகள் படுத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுமட்டுமின்றி, நோயாளிகள் பலர் படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் தரையில் படுத்துக் கொண்டிருப்பதைப் போன்ற புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் ரயில் பெட்டிகளை கோவிட்-19 வைரசின் சிகிச்சை அறையாக மாற்றியிருப்பதாக இந்திய ரயில்வேத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது, சிகிச்சை அறையாக மாறியிருக்கும் இந்த ரயில் பெட்டிகள் குறித்த புகைப்படத்தையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 64,000 படுக்கைகள் வசதிக் கொண்ட ரயில் பெட்டிகளை தயார்படுத்தியிருப்பதாக அமைச்சகம் கூறியுள்ளது.

நாட்டின் வெவ்வேறு மாநிலங்களுக்கு இவற்றை அனுப்பி வைக்க இருப்பதாகவும் அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்காக நான்காயிரம் கோச்சுகளை ரயில்வே அமைச்சகம் கொரோனா வார்டுகளாக மாற்றியுள்ளது. இவற்றில் தற்போது 169 கோச்சுகளை வெவ்வேறு மாநிலங்களின் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அமைச்சகம் வைத்திருக்கின்றது.

ஒவ்வொரு கோச்சுலேயும் (ரயில் பெட்டியிலும்) 16 நோயாளிகள் வரை தங்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. நோயாளிகளுக்கு தேவையான முக்கிய மருத்துவ கருவிகள் இந்த பெட்டிகளில் இருக்கும் என கூறப்பட்டடுள்ளது. இதுமட்டுமின்றி, தூய்மைப்படுத்தும் கருவிகள் மற்றும் உணவகங்களில் இருக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது, மிக தீவிரமாக நிலவும் படுக்கையறை வசதி இல்லாத நிலைமை கட்டுப்படுத்த இந்த ரயில் பெட்டிகள் உதவும் என அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்காகவே பல ஆயிரம் ரயில் பெட்டிகளை தற்காலிக கொரோனா வார்டாக ரயில்வேத்துறை மாற்றியமைத்திருக்கின்றது.

படுக்கை வசதி மட்டுமின்றி கொரோனா நோயாளிக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் வெண்டிலேட்டர் போன்ற முக்கிய கருவிகளும் தற்காலிக கொரோனா வார்டு ரயில் பெட்டிகளில் இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








