ஓட்டுனர் உரிமத்தை இனி கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை... மத்திய அரசு அதிரடியாக அறிவிப்பு...
வாகன ஓட்டிகளின் கவன குறைவை தவிர்க்கும் பொருட்டு மத்திய அரசு புதிய போக்குவரத்து விதிமுறைகளை அமலுக்கு கொண்டுவந்துள்ளது. அதனை பற்றி விரிவாக இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

வாகன ஓட்டிகளின் பொதுவான கவன குறைவுகளுள் முதன்மையானது லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட ஆவணங்களை மறந்து வீட்டில் வைத்துவிட்டு வருவது. ஒரு நேரத்தில் ஆர்சி புக் கையில் இருந்தால், லைசன்ஸ் வீட்டில் இருக்கும்.

இவ்வாறான பிரச்சனைகளில் சிக்கி கொள்ளும் வாகன ஓட்டிகளை நாளுக்கு ஒருமுறையேனும் பார்த்துவிடுவோம். ஆனால் இத்தகைய கவன குறைவிற்கு இனி வாகன ஓட்டிகள் பயப்பட தேவையில்லை. ஏனெனில் இவ்வாறான பிரச்சனைகளை தவிர்க்கவே மத்திய அரசு பழைய விதிமுறைகளை திருத்தியமைத்து புதிய போக்குவரத்து விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.

இந்த புதிய விதிமுறைகளின் வாகன ஓட்டிகள் தங்களது ஓட்டுனர் உரிமம், ஆர்சி புக், இன்சூரன்ஸ் நகல் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் முறையில் மொபைல் போன்களில் வைத்திருந்தாலே போதும், போக்குவரத்து போலீசார்கள் கட்டாயம் அவற்றை ஏற்று கொள்ள வேண்டும்.

இன்று முதல் (அக்டோபர் 1) அமலுக்கு வந்த புதிய விதிமுறையினால் இத்தகைய ஆவணங்களை கையில் வைத்து கொண்டு பயணிக்க வேண்டும் என்ற தொல்லை வாகன ஓட்டிகளுக்கு இனி இல்லை. ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டிய விதிமீறல்களின்போதும், காகித வடிவிலான ஆவணங்களை போலீசார் கேட்க கூடாது என்பதும் இந்த புதிய விதிமுறைகளில் அடங்குகிறது.

செல்போன் செயலிகளில் டிஜிட்டல் வடிவில் உள்ள ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், பெர்மிட்டுகள், இன்சூரன்ஸ் நகல், மாசு கட்டுப்பாட்டு சான்று உள்ளிட்டவற்றை ஏற்குமாறு கடந்த ஆண்டே மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது பழைய விதிமுறைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

மேற்கூறப்பட்ட ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைக்க எம்-பரிவாகன் மற்றும் டிஜிலாக்கர் ஆப்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. இதனால் இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் மத்திய அரசு வாகன ஓட்டிகளுக்கு வழிக்காட்டியுள்ளது.

ஏனெனில் லைசன்ஸ், ஆர்சி புக், இன்சூரன்ஸ் நகல் உள்ளிட்டவற்றை புகைப்படமாக எடுத்து வைத்திருந்தால் அவை செல்லப்படியாகாதாம். இதேபோல், சாலை விபத்துகளின்போது, தொண்டுள்ளத்தோடு உதவ வருபவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை காவல்துறையினரோ வேறு பிறரோ கேட்டு வற்புறுத்தக்கூடாது என மோட்டார் வாகன சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

காயம் அல்லது உயிரிழப்பு போன்ற ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் சூழலில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அல்லது வேறு வழிகளில் உதவ முன்வருபவர்கள் மீது, சிவில் அல்லது கிரிமினல் வழக்கு பதியக் கூடாது எனவும் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கு வருபவர்கள் பாரபட்சமின்றி மரியாதையாக நடத்தப்பட வேண்டும் எனவும் புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் வடிவில் ஆவணங்கள் வழங்கப்படும் நேரம் & தேதி மற்றும் போலீஸ் அலுவலரின் ஆய்வு உள்ளிட்டவை பதிவு செய்யப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








