சூப்பர்... கொரோனா வீசிய பந்தை சிக்சருக்கு விளாசும் மத்திய அரசு... தரமான சம்பவத்தை செய்ய ரெடி ஆகிறது
கொரோனா வீசிய பந்தை சிக்சருக்கு விளாச மத்திய அரசு தயாராகி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியதாக கூறப்படும் கோவிட்-19 வைரஸ், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து என உலகின் முன்னணி நாடுகள் பலவற்றில் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை சமாளிப்பதற்காக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்திய சாலைகள் இதன் காரணமாக தற்போது வெறிச்சோடி கிடக்கின்றன. பஸ், கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து இன்றி சாலைகள் காற்று வாங்குகின்றன.

இப்படிப்பட்ட சூழலில், கோவிட்-19 வைரஸை ஒரு வாய்ப்பாக மாற்றி கொள்ள வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். அத்துடன் ஹைவே கட்டுமான பணிகளை போர்க்கால அடிப்படையில் மீண்டும் தொடங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவது மட்டுமே காரணம் அல்ல. மோசமான சாலைகளும் கூட ஒரு காரணம்தான். எனவே தரமான சாலைகளை அமைப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அத்துடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் சாலைகளின் பங்களிப்பு முக்கியமானதாக இருப்பதால், இந்த விஷயத்தில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. 2019-20ம் நிதியாண்டில் மட்டும் 3,979 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளை, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைத்துள்ளது. இதற்கு முன் ஒரே நிதியாண்டில் இவ்வளவு தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதில்லை.

இதனால் இது ஒரு சாதனையாகும். முன்னதாக கடந்த 2018-19ம் நிதியாண்டில், 3,380 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த சூழலில்தான், கோவிட்-19 வைரஸ் காரணமாக முடங்கியிருக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என நிதின் கட்கரி கூறியுள்ளார்.

நெருக்கடிகளை வாய்ப்பாக மாற்றி கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகவும், நெடுஞ்சாலை கட்டுமான திட்ட பணிகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மாநில அரசுகளுடன் பேசி கொண்டிருப்பதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதனால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ''அதிகாரிகள் உடனான கூட்டத்தில் கலந்து கொண்டேன். கொரோனா வைரசுக்கு எதிராக போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தபின் பணிகளை மீண்டும் தொடங்க முடியும். ஆனால் வழிகாட்டுதல்களை நாம் முறையாக பின்பற்ற வேண்டும். எந்தவொரு பிரச்னையையும் நம்மால் வாய்ப்பாக மாற்றி கொள்ள முடியும்.

தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொரோனா வைரஸ் காரணமாக நெடுஞ்சாலை துறை பல்வேறு தடைகளை எதிர்கொண்டுள்ளது. வருகின்ற ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் முக்கியம்'' என்றார்.

நெடுஞ்சாலை பணிகளை மீண்டும் தொடங்கினாலும் கூட, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதை நிதின் கட்கரி அழுத்தமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''இந்த ஆண்டில் (2019-20) செய்த பணிகளை விட, இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக செய்யும் திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன.

பொருளாதாரம் மேம்பட வேண்டுமென்றால், சாலை துறை சிறப்பான பணியை செய்ய வேண்டும்'' என்றார். பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதிலும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தீவிரம் காட்டி வருகிறார். இவரது முயற்சியின் பலனாகதான் புதிய மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் மிகவும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், எதற்கும் பின்வாங்காமல் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன் விளைவாக இந்தியாவில் வாகன ஓட்டிகள் தற்போது ஓரளவிற்கு விதிமுறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

அத்துடன் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியையும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். இதன் மூலமாக கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதுடன், காற்று மாசுபாடு பிரச்னைக்கும் தீர்வு காணலாம் என்பதே இதற்கு காரணமாக உள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








