நீட் தேர்வில் தேர்ச்சியை இப்படியா கொண்டாடுவது? வருங்கால மருத்துவர்கள் நடந்துக் கொள்ளும் விதமா இது?
கல்வியின் முக்கியத்துவத்தில் ஒன்று ஒழுக்கம் என அறிஞர்கள் பலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதன் முக்கிய நோக்கமே அவர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே. ஒழுக்கமில்லாத கல்வியறிவு ஆபத்தானது. ஆனால், இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களுள் ஒன்று இதனை உணராமல் தன்னிடம் பயின்ற மாணவர்களை வாகனத்தில் நிற்க வைத்து தெரு தெருவாக அழைத்து சென்று ரோடு ஷோ நடத்தியுள்ளது. இது எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதையும், இந்த செயலில் ஈடுப்பட்டுள்ள அந்த இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனத்தையும் பற்றியும் இனி பார்க்கலாம்.
மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு வேண்டுமா அல்லது வேண்டாமா? என்பது இன்னமும் விவாதத்திற்கு உள்ளானதாகவே உள்ளது. இருப்பினும், மத்திய அரசு நீட் தேர்வை கட்டாயமாக்கி விட்டது. நீட் தேர்வினால் மாணவ, மாணவிகள் மேலும் பணத்தை செலவழித்து தனியாக ஒரு கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டியிருக்கும் என்றும், இதனால் மருத்துவ படிப்பு ஏழை, எளியோருக்கு எட்டா கனியாக மாறிவிடும் என்றும் பலர் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

சில மாணவ, மாணவிகள் தங்கள் மீது நம்பிக்கை வைத்து வீட்டிலேயே படிக்கின்றனர். ஆனால், பலர் கல்வி நிறுவனங்களை தேடியே செல்கின்றனர். இதன் மூலமாக பல தனியார் கல்வி நிறுவனங்கள் வெகுவாக பணத்தை சம்பாதிக்கின்றன. அத்தகைய தனியார் கல்வி நிறுவனங்களுள் ஒன்றுதான் ஆகாஷ் இன்ஸ்டிட்யூட் (Aakash Institute) ஆகும்.
ஆகாஷ் இன்ஸ்டிட்யூட்டை 2021ஆம் ஆண்டில் பைசூஸ் வாங்கியது. இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக பைசூஸ் சில வருடங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால்தான், டெல்லியில் தலைமையகத்தை கொண்ட ஆகாஷ் இன்ஸ்டிட்யூட்டை நம் தமிழ்நாட்டில் ஏதோவொரு மூலையில் உள்ள மாணவர்களுக்கு கூட தெரிந்திருக்கிறது. 35 ஆண்டுகளாக மருத்துவ படிப்பை சொல்லிக் கொடுத்தாலும், கடந்த சில வருடங்களில் இந்த அளவிற்கு வளர்ச்சியை கண்டுள்ள ஆகாஷ் இன்ஸ்டிட்யூட் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் நீட் தேர்வு நடைபெற்றதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைகிறேன். நீட் தேர்வு முடிவுகள் கூட சமீபத்தில் வெளியாகிவிட்டன. இந்த தேர்வில் ஆகாஷ் இன்ஸ்டிட்யூட்டில் பயின்ற உத்தர பிரதேசம் மாநிலம், மீரட்டை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுவாக, இவ்வாறு பெரிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால், இனிப்புகளை கொடுத்து மாணவ, மாணவிகள் கொண்டாடுவதை பார்த்திருக்கிறோம்.
தனது டியூசனில் படித்த அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றால், அந்த டியூசனின் ஆசிரியர் தனது மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்குவார். ஆனால், மீரட் நகரத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஆகாஷ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் திறந்த வெளி வாகனங்களில் நிற்க வைத்து அழைத்து சென்றுள்ளது.

இது கல்வி நிறுவனத்தின் ஒரு விளம்பர யுக்தி என்பதை உணராத மாணவ, மாணவிகள் ஜாலியாக பாட்டு பாடி கொண்டும், நடனமாடி கொண்டும் சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பலரது கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி உள்ளது. இந்தியா முழுவதும் மாணவர்களை கொண்ட ஒரு பெரும் கல்வி நிறுவனம் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்துக் கொள்ளலாமா என நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 177-இன்படி, அனுமதி இல்லாமல் சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றி செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். சரக்கு வாகனங்களில் மக்களை அமர வைத்து அழைத்து செல்வதே முதலில் குற்றம் எனும் பட்சத்தில், ஆகாஷ் இன்ஸ்டிட்யூட் தனது ரோடு ஷோவில் நிற்க வைத்தப்படி அழைத்து சென்றுள்ளது. டாடா ஏஸ், மஹிந்திரா தார் வாகனங்களில் மாணவ, மாணவிகள் தலையில் காவி தலைப்பாகை உடன் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாணவர்களின் மனதில் நல்ல விஷயங்களை விதைத்தால்தான் அவர்கள் பெரியவர்கள் ஆன பின் அதை கடைப்பிடிப்பார்கள். இவ்வாறான செயல்களில் அவர்களை உட்படுத்தினால், இது சட்டத்திற்கு புறம்பானது என்பதே அவர்களுக்கு தெரியாமல் போக கூடும். உத்தர பிரதேசத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் மற்றொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து ஆகாஷ் இன்ஸ்டிட்யூட் நிறுவன பணியாளர்களும் ரோடு ஷோவில் தம்ஸ்-அப் முத்திரையை காட்டியப்படி சென்றதுதான்.


Click it and Unblock the Notifications









