இனி ஒரே மெட்ரோ ரயிலில் சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை போகலாம்..!!
இனி ஒரே மெட்ரோ ரயிலில் சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை போகலாம்..!!
நேரு பூங்கா முதல் சென்னை சென்ட்ரல் இடையே அமைக்கப்பட்டுள்ள சுரங்க மெட்ரோ ரயில் போக்குவரத்து 2018 பிப்ரவரி முதல் தொடங்குகிறது.

இதற்கான சோதனை ஓட்டம் அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்குகிறது. அப்போது மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் நேரடியாக ஆய்வு செய்யவுள்ளார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சென்னையில் பல முக்கிய வழிப்பாதைகளில் அமைக்கப்பட்டு வந்த அனைத்து மெட்ரோ கட்டுமான பணிகளும் இறுதி வடிவம் பெற்று வருகின்றன.

அந்தவகையில் சென்னையின் முதல் மெட்ரோ போக்குவரத்து கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை உயர்மட்ட பாதையில் பயன்பாட்டிற்கு வந்தது.

தொடர்ந்து சின்னமலை முதல் விமானநிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. இதுவும் உயர்மட்ட நிலை பாதையாகும்.
சென்னையின் முதல் சுரங்க வழிப்பாதை மெட்ரோ ரயில் போக்குவரத்து திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை பயன்பாட்டிற்கு வந்தது.

தற்போது 2வது சுரங்க மெட்ரோ ரயில் சேவை, நேரு பூங்கா முதல் சென்ட்ரல் இடையே தொடங்கப்படவுள்ளது.
இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்தள்ளது. தற்போது தண்டவாளம், சிக்னல் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

வரும் ஜனவரி முதல் இந்த மெட்ரோ தடத்திற்கான சோதனை ஓட்டம் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பிறகு பிப்ரவரி முதல் பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழு மெட்ரோவில் பயணம் செய்து ஆய்வு நடத்தவுள்ளனர்.

அதிகாரிகளின் ஆய்விற்கு பிறகு கிடைக்கும் முடிவுகளை வைத்து, பிறகு பிப்ரவரி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மெட்ரோ சேவை இயக்கப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல் முதல் நேரு பூங்கா வரை சுரங்க மெட்ரோ சேவை பயன்பாட்டிற்கு வந்தால், ஒரே நேரத்தில் பயணிகள் சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை செல்ல முடியும்.

இதுதவிர சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வரையிலான சுரங்க மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளும் நிறைவடைந்துள்ளன.

இதற்கான பணிகளை அதிகாரிகள் ஜனவரி முதல் ஆய்வு செய்கின்றனர். அனைத்தும் கைக்கூடி வந்தால் சைதாப்பேட்டை- தேனாம்பேட்டை டிஎம்எஸ் சுரங்க மெட்ரோ சேவையும் பிப்ரவரியில் தொடங்கலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications