ஆந்திராவின் தலைநகரில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி
ஆந்திரப்பிரதேசத்தின் புதிய தலைநகர் அமராவதியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
நாட்டின் முதல் நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றிய ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகரமாக வடிவம் பெற்றுவரும் அமராவதியில், பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் புகை மாசை தவிர்க்கவும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவை, இரண்டாக பிரித்து தெலங்கானா என்ற புதிய மாநிலம் உதயமானது நமக்கு நினைவிருக்கலாம். ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஹைதராபாத்தை தெலங்கானாவின் தலைநகராக மாற்றியதால், அமராவதி எனும் புதிய தலைநகரை ஆந்திர அரசு தற்போது உருவாக்கி வருகிறது.

இரண்டு மாநிலங்களுக்கும் பொதுத்தலைநகரமாக 10 வருட காலத்திற்கு ஹைதராபாத் நீடிக்கும், அது வரையிலும் புதிய ஆந்திரத் தலைநகரான அமராவதியில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். வெளிநாடுகளுக்கு இணையான ஒரு நகரமாகவும் இந்தியாவின் முன்மாதிரி நகரமாகவும் அமராவதியை உருவாக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு முயன்று வருகிறார்.

நகரமயமாக்கல் காரணமாக இன்று இந்தியாவில் பெரும்பான்மையான நகரங்கள் முழுக்கவே கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டன. ஆதலால் அதைப் போன்ற பிரச்சனையில்லாத ஒரு பசுமை நகராக அமராவதியை வடிவமைத்து வருகின்றனர். கோதாவரி - கிருஷ்னா நதிகளை இணைத்து நாட்டிலேயே முதல் நதிகள் இணைப்பு திட்டட்தையும் கடந்த ஆண்டு தான் ஆந்திராவில் செயல்படுத்தியுள்ளனர்.

தலைநகர் அமராவதியின் கட்டமைப்பில் பசுமைக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் வாகனங்களால் ஏற்படும் மாசினை தவிர்க்க எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே அங்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் சேவைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து பேருந்துகளுமே எலெக்ட்ரிக் பேருந்துகளாகவே இருக்கப்போகிறது.

இது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு பின்னர் அமராவதியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே இயக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சைக்கிள்கள், பாதசாரிகளுக்கான பிரத்யேக நடைபாதைகள் மற்றும் நீர்வாய்க்கால்கள் மூலம் படகு டாக்ஸி சேவை என சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு அங்கு போக்குவரத்து அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப்பிரதேச தலைநகரை வடிவமைக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ள ‘Foster + Partners' நிறுவனம் புதிதாக உருவாக்கப்படும் அமராவதி நகரம், 51% பசுமை, 10% நீர், 14% சாலை மற்றும் 25% கட்டுமானம் என்ற விகிதத்தில் கட்டமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் இந்த நகரின் பெரும்பான்மையான நீர்த் தேவை ‘மழை நீர் சேகரிப்பு' முறை மூலமே பூர்த்தி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரமயமாக்கல் காரணமாக பச்சைபசேலென இருந்த பகுதிகள் தற்போது முற்றிலும் கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டதால் பருவநிலை மாற்றம் அடைந்து சீரான மழை வளத்தை நாம் இழந்து விட்டோம். அதிக வெயில், அதிக மழை, வெள்ளம் என மாறி மாறி நிகழ்ந்து வருகிறது. டிசம்பர் 1, 2015ல் ஏற்பட்ட சென்னை பெரு வெள்ளம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

எனவே பசுமையின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாக கட்டமைக்கப்பட்டு வரும் புதிய ஆந்திரத் தலைநகர் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக அமையப்போகிறது. சென்னையில் கூட இதைப்போல் எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்பட்டால் புகைமாசுவை தவிர்க்கலாம் என்பதே மக்களின் எதிர்பார்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications








