மும்பையில் தீப்பிடித்து எரிந்த டட்சன் ரெடிகோ கார்... அடுத்த நானோவா என பீதி!
மும்பையில், புத்தம் புதிய டட்சன் ரெடிகோ கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்மையில் விற்பனைக்கு வந்த டட்சன் ரெடிகோ கார் வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆல்ட்டோவை அடிக்கடி பார்த்து சலித்து போனவர்களுக்கும், க்விட் காரின் காத்திருப்பு காலத்தை கண்டு அலுத்துப் போனவர்களுக்கும் சரியான மாற்று தேர்வாக டட்சன் ரெடிகோ கார் வந்துள்ளது.

இந்தநிலையில், மும்பையில் டட்சன் ரெடிகோ கார் ஒன்று நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததை படமெடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பதிவேற்றியிருக்கின்றனர். பதிவு எண் கூட எழுதப்படாத அந்த புத்தம் புதிய கார் தீப்பிடித்து எரிந்திருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பையின் மேற்கு எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து எமக்கு கிடைத்த தகவல்களின்படி, டீலர் யார்டிலிருந்து ஷோரூமுக்கு எடுத்துச் செல்லும்போது, அந்த கார் டிரக் ஒன்றுடன் மோதி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே டட்சன் கார்கள் பாதுகாப்பு பிரச்னைகளில் சிக்கி தவித்த நிலையில், டட்சன் ரெடிகோ கார் மூலமாக சற்றே நிமிர்ந்திருக்கிறது நிசான்.
இந்த சம்பவத்தில் டட்சன் ரெடிகோ கார் தீப்பிடித்ததற்கான காரணத்தை ஆய்வு செயது, அந்த காரின் பாதுகாப்புத் தன்மையை நிசான் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதேபோன்று, குறைந்த விலை மாடலான டாடா நானோ கார் அடிக்கடி தீப்பிடித்து எரிந்தது. அதிலிருந்த தொழில்நுட்பப் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு தற்போது அந்த நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தநிலையில், ஏற்கனவே பாதுகாப்பு பிரச்னையில் சிக்கித் தவித்த டட்சன் ரெடிகோ கார் விபத்தில் சிக்கியவுடன் தீப்பிடித்து எரிந்திருப்பது அடுத்த நானோவா என்று பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








