2050ல் பயணிகள் விமானம் எப்படியிருக்கும்...!
கடந்த 30 ஆண்டுகால விமான பயண வரலாற்றில் பாதுகாப்பு நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும், பயண அனுபவத்தில் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. இந்த நிலையில், இன்னும் 30 ஆண்டுகள் கழித்து விமான பயணம் எவ்வாறு இருக்கும்.
பயணிகளுக்கான வசதிகளும், விமானத்தின் வடிவமைப்பிலும் எந்தளவு மேம்பட்டிருக்கும் என்பதை அனுமானிக்கும் விதத்தில் எதிர்கால விமானத்தின் டிசைன் மாதிரிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதில், இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்புக் குழு
2050ம் ஆண்டுக்கான விமான மாதிரியை ஏர்போர்ட் பார்க்கிங் அண்ட் ஓட்டல்ஸ் என்ற நிறுவனமும், லண்டனை சேர்ந்த இம்பீரியல் கல்லூரியும் இணைந்து வடிவமைத்து வெளியிட்டிருக்கின்றன. மேலும், இந்த விமான டிசைனை இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த விமானவியல் வடிவமைப்பு ஆராய்ச்சி மாணவர் ஆடம் ஒமர் வடிவமைத்துள்ளார்.

டிசைன் மாற்றம்
இப்போதுள்ள விமானங்களை விட அகலமான இறக்கைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதனால், விமானத்தின் உட்புறத்தில் அதிக இடவசதியை ஏற்படுத்தி தரும்.

பிரம்மாண்டம்
வடிவமைப்பு மாற்றத்தின் அடிப்படையில், இந்த விமானத்தில் 1,000 பேர் பயணிக்கும் வசதி கொண்டதாக இருக்கும்.

இடவசதி
தற்போதுள்ள விமானங்களின் சாதாரண வகுப்பில் மிகவும் நெருக்கடியான இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எதிர்கால விமானங்களில் மிகச் சிறப்பான இடவசதியை அளிக்கும் இருக்கைகளும், பொழுதுபோக்கு சாதனங்களும் இருக்கும்.

ஜன்னலுக்கு பதில் திரை
பக்கவாட்டில் ஜன்னலுக்கு பதிலாக பெரிய டிஜிட்டல் திரை கொடுக்கப்பட்டிருக்கும். அதில், பயணத்தை பற்றியும், சீதோஷ்ண நிலை பற்றியும் பல்வேறு தகவல்களை காண முடியும்.

புதிய அனுபவம்
இப்போதுள்ள ஜன்னல்கள் மிகவும் சிறியவையாக இருப்பதால், வெளிப்புறத்தை முழமையாக கண்டு ரசிக்க முடியாத நிலை இருக்கிறது. இதனை போக்கும் விதத்தில், பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் திரை மூலமாக வெளிப்புறத்தை முழுமையாக காணும் வாய்ப்பும் பயணிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், விமான வடிவமைப்பு இருக்கும்.

சகல வசதிகள்
இந்த பிரம்மாண்ட விமானத்தின் உள்ளேயே பார் வசதி, இருக்கைகளை நகர்த்தி இடம் மாற்றிக்கொள்ளும் வசதி என பல வசதிகளை கொண்டதாக இருக்கும்.

இலகு எடை
எதிர்காலத்துக்கான இந்த விமானத்தின் கட்டமைப்பில் போயிங் விமான நிறுவனம் தயாரித்திருக்கும் மைக்ரோலேட்டிஸ் என்ற புதிய மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படும். இதன்மூலம், இலகு எடை மற்றும் அதிக உறுதி கொண்டதாகவும் இருக்கும்.

எரிபொருள் சிக்கனம்
இலகு எடை கொண்ட இந்த விமானம் மிக அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதோடு, குறைவான கார்பன் புகையை வெளியிடும் தன்மை கொண்டதாக இருக்கும்.

மின் ஆற்றல்
பேட்டரியிலிருந்து மின் ஆற்றலை பெறுவதற்காக நவீன லித்தியம் ஏர் பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பேட்டரிகள் பறக்கும்போது வளி மண்டலத்திலிருந்து ஆக்சிஜனை உறிஞ்சி, ஆற்றலாக சேமிக்கும் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கும். மேலும், மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரியைவிட இந்த லித்தியம் ஏர் பேட்டரிகள் 10 மடங்கு அதிக திறன் கொண்டவை.

மாற்றங்கள்
இந்த புதிய வகை விமானங்களை நிறுத்துவதற்கும், தரை இறக்குவதற்கும் ஏதுவாக விமான நிலையங்களில் மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும்.
Picture credit: Airport Parking & Hotels


Click it and Unblock the Notifications








