மொதல்ல ரோட்டை தரமா போடுங்கப்பா... மழையால் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மூழ்கிய கார்... யாருடையது தெரியுமா?
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வட இந்திய பகுதிகளில் தற்போது பருவ மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் அடிக்கடி வெள்ள பெருக்கு ஏற்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுதவிர ஒரு சில அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து காவல் துறையை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரின் கார், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்திருப்பது அதற்கு ஒரு உதாரணம்.

இந்த சம்பவத்தின் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தலைநகர் டெல்லியில் துவாரகா பகுதியில் உள்ள செக்டார் 18-ல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மாலை 5 மணியளவில் இந்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. போக்குவரத்து காவல் துறையை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர், வெள்ளை நிற ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரை ஓட்டி வந்தார்.

அப்போது மழை காரணமாக சாலையில் ஏற்பட்டிருந்த திடீர் பள்ளத்தில் அந்த கார் கவிழ்ந்தது. கிட்டத்தட்ட முழு காரும் பள்ளத்தில் மூழ்கி விட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு, சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள் மீட்கப்பட்டு விட்டதாக டெல்லி காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், கிரேன் வரவழைக்கப்பட்டது. பின்னர் அதன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மத்தியில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழை காலங்களில் சாலைகளில் இதுபோன்ற திடீர் பள்ளங்கள் ஏற்படுவது இந்தியாவில் வாடிக்கையான ஒரு நிகழ்வாக மாறி வருகிறது.

இந்தியாவில் சாலைகள் தரமாக அமைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஒப்பந்ததாரர்கள் லாபம் ஈட்டுவதற்காக, மிக குறைந்த செலவில் தரமற்ற சாலைகளை அமைத்து விடுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மழை பெய்யும் சமயங்களில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு விடுகின்றன.

இதுபோன்ற திடீர் பள்ளங்களால் ஏற்படும் விபத்துக்கள் மிகவும் அபாயகரமானவை. நல்ல வேளையாக டெல்லியில் நடைபெற்ற சம்பவத்தில் காரை ஓட்டி வந்த போலீஸ் கான்ஸ்டபிள் காயமின்றி உயிர் தப்பி விட்டார். இந்தியாவில் தற்போது பெய்து வரும் பருவமழை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் கன மழை காரணமாக பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. பருவமழை காலங்களில் மும்பை சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்படுவது என்பது ஒவ்வொரு வருடமும் நடக்க கூடிய வாடிக்கையான நிகழ்வாக மாறி விட்டது. இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான் காணப்படுகிறது.
எனவே மழைக்காலங்களில் வாகனங்களில் பயணம் செய்யும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக அதிவேகத்தில் பயணம் செய்வதையும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதையும் தவிர்த்து விட வேண்டும். இந்த 2 தவறுகளும் நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications