இனியும் அரச ஏமாற்றி இழுத்தடிக்க முடியாது! அபராத செல்லானை கட்டாம வச்சிருக்கீங்களா! கதற விட பிளான் போட்டுட்டாங்க
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அடுத்த முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடக் கூடாது என்பதற்காக அபராதம் வழங்கப்படுகின்றது. இதனை இரண்டு வழிகளில் போக்குவரத்து காவல்துறையினர் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சாலையோரங்களில் நின்றுக் கொண்டு விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளைப் பிடித்து அவர்களுக்கு அபராத செல்லான்களை வழங்குவது மற்றும் முக்கிய சாலைகளில் அதி நவீன தொழில்நுட்ப வசதிக் கொண்ட கண்கானிப்பு கேமிராக்களைப் பொருத்தி அதன் வாயிலாக விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு இ-செல்லானை போட்டு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதில் நேரில் போடப்படும் அபராத செல்லான்களுக்கு உடனடி வசூல் செய்த பின்னரே வாகன ஓட்டியை காவல்துறையினர் விடுவிப்பர். இல்லையெனில் அவர் மீது கிடுக்குப்பிடி பாயும். அதாவது, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஒரு நபர் தன்னிடம் அபராதம் செலுத்த பணம் இல்லை என்று சொன்னால், அவரின் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

அபராதம் செலுத்திய பின்னரே அவ்வாகனம் விடுவிக்கப்படும். ஆனால், இ செல்லாணில் இப்படி செய்ய முடியாது. வாகன ஓட்டி தாமாகவே முன் வந்து பணத்தைக் கட்டினால் மட்டுமே முடியும். ஆனால், வாகன ஓட்டிகள் பெரும்பாலானோர் இதற்கு தயாராக இல்லை. ஆமாங்க, இ செல்லானைப் பெற்ற பலர் அதைச் செலுத்தாமல் நாள் கழித்து வருகின்றனர்.
இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவேதான், அபராதத்தைச் செலுத்தாமல் கால தாமதம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க அரசு புதிய விதிகளை உருவாக்கி வருகின்றது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இதுவரை போடப்பட்ட இ-செல்லான்களில் வெறும் 40 சதவீதம் மட்டுமே அரசுக்கு திருப்பி வந்திருக்கின்றது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த நிலையே நீடித்து வருவதாக கூறப்படுகின்றது. இதன் விளைவாகவே புதிய விதிக்கான வரைவை அரசு தற்போது தயார் செய்திருக்கின்றது. யாரெல்லாம் நீண்ட காலமாக அபராதத்தைச் செலுத்தாமல் இழுத்தடிப்புச் செய்துக் கொண்டிருக்கின்றனரோ அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே அந்த புதிய விதியின் முக்கிய அம்சம் ஆகும்.
குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்பதை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். இதுமட்டுமல்ல, இன்சூரன்ஸ் பாலிசி கட்டணத்தை அதிகப்படுத்துவதற்கான வழிகளையும் இந்த புதிய விதியின் வாயிலாக அரசு உருவாக்கி இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், இந்த புதிய விதி வெகுவிரைவில் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலுவையில் இருக்கும் அனைத்து இ-செல்லான்களையும் உடனடியாக வசூலிக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இத்தகைய நடவடிக்கையை அரசு மேற்கொண்டு உள்ளது. இதுமட்டும் அல்ல, போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்க வேண்டும் என்பதும் அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதற்கேற்பவே புதிய விதி உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
அது, அபராத செல்லான் வழங்கப்பட்ட 90 நாட்களில் அபராதத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும் என்பதையும் கட்டாயமாக்கி இருக்கின்றது. இதை மீறும்பட்சத்திலேயே லைசென்ஸ் இழப்பு மற்றும் அதிக காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட சிக்கல்களில் சிக்க நேரிடும். இந்த கெடுபிடி காரணமாக போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத செல்லானை நிலுவையில் வைத்திருக்கும் அனைத்து மக்களும் உடனடியாக தங்களுடைய அபராதங்களைச் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நம்முடைய தமிழகத்தில் மட்டும் 27 சதவீதம் வரை மட்டுமே போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதங்கள் வசூலாகி உள்ளன என்பது கவனிக்கத்தகுந்தது. தமிழகத்தைவிட மிக மோசமாக டெல்லியில் வெறும் 14 சதவீதம் மட்டுமே அபராதத் தொகை போக்குவரத்து விதிமீறல்வாதிகளிடம் இருந்து வந்திருக்கின்றது. அதேவேளையில், 62 சதவீதம் முதல் 76 சதவீதம் வரை அபராதங்களை வசூலித்து ராஜஸ்தான், பிஹார், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்கள் அற்ற மாநிலமாக மாற்றும் நோக்கிலேயே அரசு புதிய புதிய விதிகளை உருவாக்கி வருகின்றது. இருப்பினும், மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்ததாக தெரியவில்லை. இந்த நிலையிலேயே அபராதத்தை வசூலிக்கும் முறையை தற்போது மாற்றும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றனர். இதன் வாயிலாக போக்குவரத்து விதிமீறல்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









