சூப்பர்... மத்திய அரசின் அதிரடியால் நடந்த நல்ல விஷயம்... என்னனு தெரியுமா?
மத்திய அரசின் அதிரடியால் நல்ல விஷயம் ஒன்று நடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். எனவே சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது.

பொதுவாக போக்குவரத்து விதிமுறை மீறல்கள்தான் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளன. எனவே புதிய மோட்டார் வாகன சட்டத்தில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக பீகார் மாநிலத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டின் இரண்டாவது பாதியில், சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 5 சதவீதமும், சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 6 சதவீதமும் குறைந்துள்ளது. பீகார் மாநில போக்குவரத்து துறை செயலாளர் சஞ்சய் குமார் அகர்வால் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஜனவரி 11-17 வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டது.

இதன் இறுதி நாளில் இந்த தகவலை சஞ்சய் குமார் அகர்வால் வெளியிட்டார். புதிய மோட்டார் வாகன சட்டம் காரணமாகவே பீகார் மாநிலத்தில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சிறப்பு நடவடிகைக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பீகார் மாநிலத்தின் 7 மாவட்டங்களில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை செயலாளர் சஞ்சய் குமார் அகர்வால் கூறுகையில், ''பெட்டயாவில் கடந்த 2019ம் ஆண்டு சாலை விபத்துக்கள் காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் கடந்த 2018ம் ஆண்டு 54 பேர் உயிரிழந்திருந்தனர். அதாவது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019ம் ஆண்டு சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 26 சதவீதம் குறைந்துள்ளது.

அதே சமயம் பங்காவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 14 சதவீதமும், லகிசராயில் 12 சதவீதமும், சிட்டமார்ஹி மற்றும் சமாஸ்டிபூரில் தலா 5 சதவீதமும், பகல்பூர் மற்றும் பூர்ணியாவில் 2 சதவீதமும் குறைந்துள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் டூவீலர்களில் பயணிக்கும் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க முயற்சித்து வருகிறோம்'' என்றார்.

பீகாரின் மாநிலத்தின் பாட்னா நகரில் தற்போது இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிகின்றனர். அதாவது பாட்னாவை பொறுத்தவரை சுமார் 94 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''தற்போது பாட்னாவில் ஹெல்மெட் அணியாதவர்களை பார்ப்பதே கடினமாக இருக்கிறது.

அந்த அளவிற்கு அனைவரையும் ஹெல்மெட் அணிகின்றனர். முன்பு பீகார் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 14 சதவீதம் பேர் மட்டுமே ஹெல்மெட் அணிந்தனர். ஆனால் தற்போது நிலைமை ஓரளவிற்கு மேம்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதும், விதிகளை கடுமையாக அமல்படுத்தியதுமே இதற்கு காரணம்.

முங்கரில் கடந்த 2018ம் ஆண்டு வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே ஹெல்மெட் அணிந்தனர். தற்போது அது சுமார் 45 சதவீதமாக உயர்ந்துள்ளது'' என்றனர். பீகார் மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு மொத்தம் 1.5 லட்சம் வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளன. அத்துடன் சுமார் 1 லட்சம் பேருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

இதில், சீட் பெல்ட் அணியாதது, ஹெல்மெட் அணியாதது, சிக்னலில் சிகப்பு விளக்கை மீறி சென்றது, வாகனங்களை அதிவேகத்தில் இயக்குவது ஆகிய போக்குவரத்து விதிமுறை மீறல்கள் அடங்கும். பீகார் மாநிலத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க இன்னும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








