மோடி அரசின் புதிய சட்டம்... அனைத்து அரசு துறைகளுக்கும் அதிரடி உத்தரவு... என்னவென்று தெரியுமா?
மோடி அரசின் புதிய சட்டம் காரணமாக, அனைத்து அரசு துறைகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை தற்போது அமலுக்கு கொண்டு வந்துள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டும் குற்றத்திற்கான அபராதம் முன்பு 500 ரூபாயாக மட்டுமே இருந்தது. இது தற்போது 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் முன்பு 1,000 ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது. இது தற்போது 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவில் சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும்படி போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் வாகன ஓட்டிகளிடம் போலீசார் கெடுபிடி காட்டி வருகின்றனர்.

லைசென்ஸ், இன்சூரன்ஸ், ஆர்சி, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் இல்லாவிட்டால் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து ரசீதை கொடுத்து விடுகின்றனர். அதே சமயம் பல்வேறு அரசு துறைகளின் வாகனங்களும் கூட இதுபோன்ற ஆவணங்கள் இல்லாமல்தான் வலம் வந்து கொண்டுள்ளன. போலீசாரின் வாகன தணிக்கையில் இது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் சாதாரண வாகன ஓட்டிகளிடம் காட்டும் கெடுபிடியை அரசு துறைகளை சேர்ந்த வாகனங்கள் மீது போலீசார் காட்டுவதில்லை என புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. எனவே இந்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டும் விதமாக, வாகனங்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் பெற்று கொள்ளுமாறு அனைத்து அரசு துறைகளுக்கும் தற்போது அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

சில அரசு வாகனங்களுக்கு ஆர்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் போன்ற முக்கியமான ஆவணங்கள் இல்லாதது வாகன தணிக்கையின்போது கண்டறியப்பட்டதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் அனைத்தையும் சரியாக வைத்து கொண்டுதான் அரசு வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில போக்குவரத்து துறை சார்பில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில வர்த்தக மற்றும் போக்குவரத்து துறையின் கூடுதல் செயலாளர் பிரேமானந்த குந்தியா இது தொடர்பாக அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இதில், அரசு வாகனங்களுக்கு தேவையான ஆவணங்கள் இருப்பதன் அவசியம் குறித்து கூறப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அபராத தொகைகள் மிகவும் கடுமையாக இருப்பதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவார்கள் என ஒரு சில மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. எனவே ஒரு சில மாநிலங்களில், அபராத தொகைகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஒடிசாவை பொறுத்தவரை புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வருவதற்கு 3 மாதம் கருணை காலமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கருணை காலம் முடிவதற்குள், அரசு வாகனங்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் பெற்று விட வேண்டும் என அம்மாநில போக்குவரத்து துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இதனிடையே வாகனங்களுக்கு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் பொதுமக்கள் பெற வசதியாக, ஆர்டிஓ அலுவலகங்களின் வேலை நேரத்தை போக்குவரத்து துறை அதிகரித்துள்ளது. மேலும் கூடுதல் கவுண்டர்களும் திறக்கப்பட்டுள்ளன. புவனேஸ்வர் நகரில் மட்டும் இதுபோல் 4 கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








