ஆத்தாடி... புதிய விதிகள் அமலுக்கு வந்த பின் வசூலான அபராத தொகை இதுதான்... நாலு நாளுக்கே கண்ண கட்டுதே
புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பு வசூலான அபராத தொகைகள் குறித்த தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், சுமார் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதுதவிர சுமார் 3 லட்சம் பேர் படுகாயமடைகின்றனர். எனவே இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 31ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். இதன்பின் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதில், சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மிக அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விதிமீறலுக்கு பழைய அபராதம் 1,000 ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு புதிய விதிமுறைகளின்படி இனி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனங்களுக்கு வழி விடாவிட்டாலும் இனி 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும். இதுபோல் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளும் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டு வகையான விமர்சனங்களும் வந்து கொண்டுள்ளன. அதிகப்படியான அபராத தொகைகளுக்கு பயந்து கொண்டு வாகன ஓட்டிகள் இனி போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பார்கள் என்பது ஆதரவு தெரிவிப்பவர்களின் கருத்தாக உள்ளது.

ஆனால் இதை காரணம் காட்டி போலீசார் இனி வசூல் வேட்டையில் இறங்கி விடுவார்கள் என்பது எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் கருத்தாக உள்ளது. எது எப்படியோ உயர்த்தப்பட்ட அபராத தொகைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டு விட்டன. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது புதிய அபராதங்களை காவல் துறையும், நீதிமன்றங்களும் விதிக்கவும் தொடங்கி விட்டன.

இந்த சூழலில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நான்கு நாட்களில் (செப்டம்பர் 1-4), போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்யப்பட்ட அபராத தொகை குறித்த தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன. இதன்படி வெறும் நான்கே நாட்களில் சுமார் 1.41 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவுதானா? என நினைத்து விடாதீர்கள்.

இது ஹரியானா மற்றும் ஒடிசா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும், முதல் நான்கு நாட்களில் வசூலான அபராத தொகை விபரம் மட்டுமே. இந்தியா முழுக்க வசூல் செய்யப்பட்ட ஒட்டுமொத்த அபராத தொகை குறித்த தகவல்கள் எதையும் தற்போது வரை அதிகாரிகள் வெளியிடவில்லை.

ஒடிசா மாநிலத்தில் வசூலான அபராத தொகை குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஒடிசாவில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக மொத்தம் 4,080 சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான அபராத தொகையாக மொத்தம் 88.90 லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா மோட்டார் வாகன துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது'' என்றார். அதே சமயம் ஹரியானாவில் 343 சலான்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 52.32 லட்ச ரூபாய் அபராதமாக வசூலாகி உள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் முதல் நான்கு நாட்களில் 1.41 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








