தீவிரவாதிகளால் அச்சுறுத்தல்.. சென்னை வங்க கடலை வட்டமடிக்கும் புதிய அதிநவீன ரோந்து கப்பல்..
தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கடலோர காவல்படைக்காக தயாரிக்கப்பட்ட அதிநவீன ரோந்து கப்பல், சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது.
தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கடலோர காவல்படைக்காக தயாரிக்கப்பட்ட புதிய அதிநவீன ரோந்து கப்பல், சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோந்து கப்பல் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட மிகப்பெரிய நாடு இந்தியா. கிட்டத்தட்ட 15,200 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, இந்தியா நீரால் சூழப்பட்டுள்ளது. எனவே கடல் வழியாக தீவிரவாதிகள், இந்தியாவிற்குள் எளிதாக புகுந்து விடும் அபாயம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.

எனினும் தீவிரவாதிகள், நாட்டிற்குள் நுழைவதை தடுக்கும் பணியை, கடலோர காவல்படை மிகச்சிறப்பாக செய்து வருகிறது. தீவிரவாதிகள் உள்ளிட்ட தீய சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்கும் பணியில், கடலோர காவல் படையின் பங்கு அளப்பரியது.

எனவே கடலோர காவல்படையை வலிமையாக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 7 அதிநவீன ரோந்து கப்பல்களை, முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரித்து, கடலோர காவல்படைக்கு வழங்குவது என கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட முதல் ரோந்து கப்பல், கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம், கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டாவது ரோந்து கப்பல், நடப்பாண்டு ஜனவரி மாதம், கடலோர காவல் படைக்கு வழங்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், கடலோர காவல்படைக்கான மூன்றாவது அதிநவீன ரோந்து கப்பல், நேற்று (ஆகஸ்ட் 28) அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில், கடலோர காவல்படையின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் நாட்டியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூன்றாவது ரோந்து கப்பலானது, அறிமுகம் செய்யப்பட்ட உடனே வங்காள விரிகுடா கடலில், தனது பணியை தொடங்கியது. விரிவான சோதனைகள் முடிந்த பிறகு, இந்த மூன்றாவது ரோந்து கப்பல், கடலோர காவல் படையில், அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படும்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மூன்றாவது ரோந்து கப்பலின் நீளம் 98 மீட்டர்கள். அகலம் 14.8 மீட்டர்கள். சுமார் 2,100 டன் எடையை எடுத்து செல்லும் சக்தி, இந்த ரோந்து கப்பலுக்கு உள்ளது. இந்த ரோந்து கப்பலானது அதிகபட்சமாக மணிக்கு 26 நாட்ஸ் (knots) வேகத்தில் பயணிக்கும் திறன் வாய்ந்தது.

இந்த ரோந்து கப்பலில், அல்ட்ரா மாடர்ன் நாவிகேஷன் (Ultra Modern Navigation) மற்றும் அதிநவீன தொலைதொடர்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ரோந்து கப்பலானது வரும் மார்ச் மாதம், கடலோர காவல் படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிரவாதம் மற்றும் கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில், இந்த கப்பல் ஈடுபடுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 25 ஆண்டுகள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








