விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக இழப்பீடு! இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு தமிழகத்தில் செக்
சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக இழப்பீடு கிடைக்கும் வகையில், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு தமிழகத்தில் செக் வைக்கப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களால் நிகழும் சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு கிடைக்க சில சமயங்களில் நீண்ட காலம் ஆகிறது. இதனால் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிரடியான உத்தரவு ஒன்றை அரசு தற்போது பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்கள் சாலை விபத்துக்களை ஏற்படுத்தினால், 3 மாதங்களில் அவை பொது ஏலம் மூலமாக விற்பனை செய்யப்படும். சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் மூன்று மாத காலத்திற்குள், போதுமாக செக்யூரிட்டியை சமர்ப்பிக்க தவறினால், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்தான் இந்த அதிரடி நடவடிக்கை இனி எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கடந்த டிசம்பர் 11ம் தேதி அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாகனத்தை ஏலம் விடுவதன் மூலமாக கிடைக்கும் தொகை, சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இருக்கின்ற விதிமுறைகளின்படி, இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் உடைமையை திரும்ப பெற ஆர்டிஓ அலுவலகங்களில் வெறும் 1,000 ரூபாய் அபராதத்தை செலுத்தினாலே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சாலை விபத்து வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற வக்கீல்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், 'குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்துக்களை கண்டறிந்து, அதன் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது என்பது மிகவும் கடினமான செயல்முறை. இது அதிக காலம் எடுத்து கொள்ளும். ஒரு தனி நபரின் சொத்து விபரங்களை கண்டறிவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம்.

ஒரு வேளை அது நடந்தாலும் கூட, நீதிமன்றத்தில் வழக்கு முடிவடைய பல ஆண்டுகள் ஆகி விடும். அதுவரை விபத்தால் பாதிக்கப்பட்டவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ சிரமப்பட்டு கொண்டுதான் இருப்பார்கள்' என்றனர். இதற்கு முனியம்மாள் என்பவரை உதாரணமாக கூற முடியும். இவரது கணவர் வரதன் சாலை விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த விபத்து கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடைபெற்றது. ஆனால் முனியம்மாள் இன்னமும் நிவாரணத்திற்காக காத்து கொண்டிருக்கிறார். வரதன் பாதுகாவலராக வேலை செய்து வந்தார். ஆனால் அம்பத்தூர் அருகே சாலையை கடக்க முயன்றபோது, இரு சக்கர வாகனம் ஒன்று மோதியதால் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

இது தொடர்பாக க்ரிமினல் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த வழக்கு பூந்தமல்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதுபோன்ற பாதிப்பிற்கு உள்ளானவர்கள் முதல்வர் நிவாரண நிதியின் கீழ் ஆறுதல் பெற தகுதியுடையவர்கள் என்றாலும், அதற்கு அதிக காலம் ஆகும்.

முனியம்மாள் தனது குழந்தைகளின் கல்விக்கு உதவுவதற்காக திருத்தணியில் வீட்டு உதவியாளராக வேலை செய்து வருகிறார். ஆனால் அனைத்து நம்பிக்கையையும் இழந்து விட்டதாக அவர் தெரிவிக்கிறார். இந்த சூழலில் வெளியாகியுள்ள வாகனங்களை ஏலம் விடுவது குறித்த புதிய அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து வக்கீல்கள் கூறுகையில், ''இந்த புதிய உத்தரவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. முனியம்மாள் போன்றவர்களுக்கு இது நம்பிக்கையை அளிக்கும். இந்த உத்தரவின் மூலம் இழப்பீட்டின் ஒரு பகுதியாவது அவர்களுக்கு விரைவாக கிடைக்கும்'' என்றனர்.

அசையா சொத்துக்கள் அல்லது ஜாமீன் பத்திரங்கள் வடிவில், மூன்று மாத காலத்திற்கு உள்ளாக, போதுமான செக்யூரிட்டியை சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் வழங்காவிட்டால், விபத்துக்களுக்கு காரணமான இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை விடுவிக்க கூடாது என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வேளை சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் எவ்விதமான செக்யூரிட்டியையும் காட்ட தவறினால், அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி உடனடியாக வாகனத்தை ஏலம் விடலாம். இன்சூரன்ஸ் எடுக்காமல் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு இதன் மூலம் செக் வைக்கப்பட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








