ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் தரிசனம்... இந்தியாவுக்கு எப்போது?
சுகோய் டி50 போர் விமானத்தின் படங்கள் வெளியாகி உள்ளன. இதே விமானம் இந்திய விமானப் படையிலும் பயன்பாட்டிற்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நாடுகளிடையே பரபரப்போடு எதிர்பார்க்கப்படும் ரஷ்யாவின் புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இதே விமானம் இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பையும், ஆவலையும் கிளப்பி உள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ரஷ்யாவை சேர்ந்த மெட்டாடேட்டா என்ற இணையதளம் இந்த சுகோய் டி-50 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் படங்களை வெளியிட்டு இருக்கிறது. கோஸ்சோமோல்ஸ்க்-ஆன்- அமுர் போர் விமான தயாரிப்பு ஆலையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

இது ஒன்பதாவது சுகோய் டி-50 போர் விமானத்தின் புரோட்டோடைப் மாடலாக தெரிவிக்கப்படுகிறது. இந்த போர் விமானம் சோதனைகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத விமான தளம் ஒன்றில் இந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்தபோது படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது. பனி படர்ந்த ஓடுதளத்தில் அந்த விமானம் நின்றிருந்தது. எனவே, குளிர்காலத்தில் விமானத்தின் செயல்பாடுகள் குறித்த சோதனைக்காக அங்கு நிறுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

ரஷ்யாவின் முதல் ஒற்றை இருக்கை அமைப்பு கொண்ட ரேடாரில் சிக்காத தொழில்நுட்பம் கொண்ட ஸ்டீல்த் ரக போர் விமானமாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானம் அமெரிக்காவின் யுஎஸ் எஃப்-22 மற்றும் எஃப்-35 ஆகிய போர் விமானங்களுடன் இது போட்டி போடும். சீனாவின் ஜே-20 ரக போர் விமானத்திற்கும் இது போட்டியாக களமிறங்குகிறது.

ஒரு விமானத்தின் விலை 50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் எஃப்-35 விமானத்துடன் ஒப்பிடும்போது, இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த போர் விமானம் அதிக செயல்திறன் மிக்கதாகவும், குறைவான விலை கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வான் இலக்குகளையும், தரை இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் தொழில்நுட்ப வல்லமையை இந்த விமானம் பெற்றிருக்கும். எதிரிகளின் ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்களிலிருந்து வளைந்து நெளிந்து தப்பிக்கும் திறனும் மிகச் சிறப்பாக இருக்கும்.

மேலும், அமெரிக்காவின் எஃப்35 விமானத்தை விட 30 சதவீதம் கூடுதல் வேகத்தில் செல்லும் என்பதுடன், ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3,218 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதன் மூலமாக, எதிரி நாட்டின் உட்பகுதிக்குள் அதிக தூரம் சென்று இலக்குகளை தாக்கும் வல்லமையை பெற்றிருக்கும்.

இந்த போர் விமானத்தில் வான் மற்றும் கடலில் இருக்கும் இலக்குகளை தாக்குவதற்காக 1,800 ரவுண்டுகள் சுடும் வல்லமை கொண்ட சிறிய ரக பீரங்கி பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிறிய பீரங்கி மூலமாக, 1,200 மீட்டர் தூரம் வரையில் வான் இலக்குகளையும், 1.1 மைல் தொலைவுக்கான தரை இலக்குகளையும் துல்லியமாக தாக்க முடியும்.

அடுத்த ஆண்டு இந்த சுகோய் டி-50 ஐந்தாம் தலைமுறை விமானத்தின் உற்பத்தி துவங்குகிறது. 2018ம் ஆண்டு ரஷ்ய விமானப் படையில் சேர்க்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தை இந்தியாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் சுகோய் நிறுவனம் தயாரித்து உள்ளது. இதே விமானம் இந்திய விமானப்படையின் பயன்பாட்டில் சேர்க்கப்படும்.


Click it and Unblock the Notifications








