பாஸ்டேக் மூலம் டோல்கேட் கட்டண வசூலில் பிரம்மாண்ட சாதனை... எவ்வளவு கோடி என தெரிந்தால் ஸ்டண் ஆயிருவீங்க!
பாஸ்டேக் மூலமான கட்டண வசூலில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 19), சுங்க சாவடிகளில் பாஸ்டேக் மூலமாக மட்டும் 102 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாகும். ஏனெனில் இதற்கு முன்பாக இந்தியாவில் பாஸ்டேக் மூலம் ஒரே நாளில் இவ்வளவு அதிகமான தொகை வசூலானது கிடையாது.

முன்னதாக கடந்த பிப்ரவரி 17ம் தேதியன்று சுங்க சாவடிகளில் பாஸ்டேக் மூலம் 95 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது. இதுதான் பாஸ்டேக் மூலம் ஒரே நாளில் வசூலான அதிகபட்ச தொகையாக இருந்தது. ஆனால் வெறும் ஒரே ஒரு நாள் இடைவெளியில், அதாவது பிப்ரவரி 19ம் தேதியே இந்த சாதனை தகர்க்கப்பட்டு, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாஸ்டேக் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டபோது வாகன உரிமையாளர்களிடம் பெரிதாக வரவேற்பு இல்லை. தொடர்ந்து ரொக்கமாகவே பெரும்பாலானோர் சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்தி வந்தனர். ஆனால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக பாஸ்டேக் பயன்பாட்டை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இதன் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி 16ம் தேதியில் இருந்து அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த ஜனவரி 1ம் தேதியே அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால் வாகன உரிமையாளர்கள் பலர் பாஸ்டேக் வாங்காத காரணத்தால், பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்த கால அவகாசம் முடிவடைந்ததையடுத்து, பிப்ரவரி 15ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல், அதாவது பிப்ரவரி 16ம் தேதி முதல் இந்தியாவில் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போதும் ரொக்கமாக கட்டணம் ஏற்கப்படுகிறதுதான். ஆனால் பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

எனவே வாகன உரிமையாளர்கள் பலர் தற்போது பாஸ்டேக்கிற்கு மாறி வருகின்றனர். இதன் காரணமாக பாஸ்டேக் மூலமான பரிவர்த்தனைகள் தற்போது ஒரு நாளைக்கு 63 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. மறுபக்கம் சுங்க சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.

எனவே வரும் நாட்களில் பாஸ்டேக் மூலமான சுங்க கட்டண வசூல் மேலும் அதிகரிக்கும். பாஸ்டேக் மூலம் சுங்க சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரமும், போக்குவரத்து நெரிசலும் குறையும். ஆனால் இதற்கு மாறாக சில சுங்க சாவடிகளில் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக வாகனங்கள் அரை மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது.

இந்த பிரச்னைகளை சரி செய்வதற்கு தேவையான முயற்சிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது மேற்கொண்டு வருகிறது. எனவே வரும் நாட்களில் காத்திருக்கும் நேரம் குறையும் என எதிர்பார்க்கலாம். பாஸ்டேக் மூலம் எரிபொருள் சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என இன்னும் பல்வேறு நன்மைகளும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








